ஐ.பி.எல் தொடரின் 53 ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு டெல்லி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களை அடித்தது. அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க அதிகபட்சமாக ரியான் பராக் 50 ரன்களை அடித்தார்.
தொடர்ந்து 116 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய டெல்லி அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 38 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார். ஆட்டநாயகன் விருதினை அமித் மிஸ்ரா பெற்றார்.
போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு எங்களது அணி வீரர்கள் சுதந்திரமாக விளையாடுகின்றனர். எங்களது அணியில் உள்ள இளம் வீரர்கள் எதிரணி பந்துவீச்சாளர்கள் செயல்களை புரிந்துகொண்டு விளையாடுகின்றனர்.ஷிகார் தவான் எங்களது அணிக்காக சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை பெற்று தந்திருக்கிறார். அவர் எங்கள் அணியின் பலமாகவும் திகழ்கிறார்.
அமித் மிஸ்ரா என்னை விட பல மடங்கு சீனியர் வீரர். ஆனால், நான் சொல்வதை அவர் கேட்கிறார் மேலும், ஜூனியர் சீனியர் என்றே வித்தியாசம் எங்கள் அணியில் இல்லை இதனால் என்னால் அணியை சிறப்பாக வழிநடத்த முடிகிறது என்று ஐயர் கூறினார்.