ஐ.பி.எல் தொடரின் 26 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி துவக்க வீரர்களாக இங்கிலாந்து அணியை சேர்ந்த டென்லி அறிமுக வீரராக களமிறங்கினார். அவருடன் சுபமான் கில் களமிறங்கினார்.
அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கில் 39 பந்தில் 65 ரன்களும், ரசல் 21 பந்தில் 45 ரன்களும் குவித்தனர். இதனால் டெல்லி அணிக்கு 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.
பிறகு ஆடிய டெல்லி அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக தவான் 63 பந்தில் 97 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். மேலும், ஆட்டநாயகன் விருதினையும் தட்டிசென்றார்.
போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : தொடர்ச்சியான அடுத்தடுத்த வெற்றிகள் மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. மேலும் இதுபோன்ற மைதானங்களில் பேட்டிங் செய்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து பல மைதானங்களில் விளையாடி வருவது நமக்கு சிறந்த அனுபவத்தினை கொடுக்கும்.
இந்த போட்டியின் வெற்றி ஷிகார் தவான் ஒருவரே காரணம். அவரின் அனுபவத்தினையும், திறனையும் இந்த போட்டியில் காண்பித்தார். பார்ப்பதற்கு ஒரு அருமையான இன்னிங்ஸ் தவான் விளையாடி உள்ளார். அவர் எங்கள் அணியில் இருப்பது எங்களுக்கு பலம் என்று ஐயர் கூறினார்.