இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது தற்போது இரண்டாவதாக நடைபெற்று முடிந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்து தொடரை (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தென்னாப்பிரிக்க அணி சார்பாக ரீஸா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் மார்க்கரம் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
அதனை தொடர்ந்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 45 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 282 ரன்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 110 பந்துகளில் 113 ரன்களை குவித்து அசத்தினார். அதோடு இஷான் கிஷன் 84 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார்.
இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் சதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏனெனில் அண்மைக்காலமாக சூரியகுமார் யாதவ் 4-ஆவது இடத்தில் சிறப்பாக விளையாடி வருவதால் இந்திய அணியில் நான்காவது இடத்தை தற்காலிகமாக இழந்த ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ள டி20 தொடருக்கான இந்திய அணியில் ஸ்டாண்ட் பை வீரராக இடம் பிடித்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் டி20 அணியில் இடம் பிடித்திருக்க வேண்டிய ஒரு வீரர் தான். ஆனால் அவரது சமீபத்திய ஷார்ட் பால் வீக்னஸ் காரணமாக அவருக்கு தொடர்ச்சியாக பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது.
இதையும் படிங்க : ஒரே வார்த்தையை கூறி சி.எஸ்.கே ரசிகர்களை மகிழ்வித்த தல தோனி – அப்படி என்ன சொன்னார் தெரியுமா?
இந்நிலையில் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் தனது பேட்டின் மூலம் இந்திய அணியின் நிர்வாகத்தை கேள்வி கேட்டுள்ளார். அவரது இந்த அசத்தலான சதம் தற்போது பாராட்டுகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.