உலககோப்பை தொடரின் இரண்டாவது போட்டியான நேற்று சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேற்று ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோதின.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சினை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக பக்கர் சமான் 22 ரன்களும், பாபர் அசாம் 22 ரன்களையும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் தாமஸ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பிறகு 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக கெயில் 50 ரன்களை அடித்தார்.
பாக்கிஸ்தான் அணியின் இந்த தோல்வி குறித்து அந்த அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் பாக்கிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அஹமது குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அக்தர் கூறியதாவது : இதுவரை நான் இவ்வளவு மோசமான உடல்தகுதியுடன் ஒரு பாகிஸ்தான் கேப்டனை பார்த்ததில்லை.
சர்பிராஸ் டாஸ் போட வரும்போது தொப்பையுடன் முகம் ஊதியபடி இருந்தார். அவரது உடல் எடையின் காரணமாக அவரால் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றும் அவர் கூறினார்.