ஐபிஎல் தொடரின் 5வது போட்டி நேற்று சென்னை மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 56, ரோகித் சர்மா 43 ரன்கள் குவித்தனர். கொல்கத்தா அணியை சேர்ந்த பந்து வீச்சாளர் ரசல் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் ராணா 57 ரன்களையும், கில் 33 ரன்களை குவித்தனர். இலக்கு சிறியதாக இருந்ததால் எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் துவக்க வீரர்கள் இருவரை தவிர அடுத்து வந்த எந்த வீரரும் 10 ரன்கள் கூட அடிக்காததால் கொல்கத்தா அணியால் 20 ஓவர்களின் முடிவில் 142 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 10 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணி எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய இந்த போட்டி பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் தோல்வியில் முடிந்தது. குறிப்பாக ராணா, மோர்கன், ரசல் கார்த்திக் என பல அருமையான பேட்ஸ்மேன்கள் இருந்தும் 28 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்து கடைசி 5 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டு 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
கொல்கத்தா அணி பெற்ற இந்த மோசமான தோல்வி ரசிகர்கள் மத்தியிலும் சரி, நிபுணர்கள் மத்தியிலும் சரி பெரும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு உருக்கமான மன்னிப்பு கேட்டுள்ளார்.
Disappointing performance. to say the least @KKRiders apologies to all the fans!
— Shah Rukh Khan (@iamsrk) April 13, 2021
இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ள பதிவில் “வீரர்கள் விளையாடிய விதம் ஏமாற்றமளிக்கிறது. அணி சார்பில் ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.