இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியானது மிகப் பெரிய தவறை செய்துவிட்டதாகவும். அதுவே இந்திய அணி மிகச் சரியான முடிவை எடுத்திருப்பதாகவும் கருத்து கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஸ்பின் பௌலரான ஷேன் வார்ன். ஐசிசி நடத்தும் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இந்த போட்டிக்கான பதினோரு வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு ஸ்பின் பௌலர்கள்கூட இடம்பெறவில்லை.
அதுவே இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் என இரண்டு ஸ்பின் பௌலர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். இதுகுறித்து தான் தற்போது கருத்து தெரிவித்துள்ளார் ஷேன் வார்ன். இந்த இறுதிப் போட்டியின் முதல் நாள் மழையின் காரணமாக மொத்தமாக கைவிடப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று டாஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன், காலின் டி கிராந்தோம், டிம் சவுத்தி, ட்ரெண்ட் போல்ட், நீல் வாக்னர் என ஐந்து வேகப் பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்திருக்கின்றனர். ஆனால் ஒரு ஸ்பின் பௌலர்கூட அந்த அணியில் இடம்பெறவில்லை.
மைதானமானது வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கேன் வில்லியம்சன் அறிவித்தார். இதற்கிடையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தின்போது மைதானத்தில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக அமையும் வண்ணம் சொரசொரப்பான காலடி தடங்கள் உருவாகி இருக்கிறது. இதனை குறிப்பிட்டு ட்வீட் செய்திருக்கிறார் ஷேன் வார்ன். அதில் அவர் கூறியிருப்பதாவது,
Very disappointed in Nz not playing a spinner in the #ICCWorldTestChampionship as this wicket is going to spin big with huge foot marks developing already. Remember if it seems it will spin. India make anything more than 275/300 ! The match is over unless weather comes in !
— Shane Warne (@ShaneWarne) June 19, 2021
ஒரு ஸ்பின் பௌலரைக்கூட அணியில் சேர்க்காத நியூசிலாந்தின் முடிவானது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. காலடி தடங்களால் ஏற்கனவே பிட்ச்சில் சுழலுக்கு சாதகமான இடங்கள் மிகப் பெரிய அளவில் உருவாகி இருக்கின்றன. மழை ஏதும் வராத பட்சத்தில் இந்தியா மட்டும் 275-300 ரன்கள் அடித்துவிட்டால், இந்த போட்டியானது விரைவிலேயே முடிந்துவிடும் என்று அவர் அந்த ட்வீட்டில் கூறியிருக்கிறார்.
இப்படி இந்த மைதானமானது சுழலுக்கு சாதகமான வகையில் மாறி வரும் நிலையில் இந்திய அணியில் இரண்டு சூழல் பந்து வீச்சாளர்கள் இருப்பது இந்திய அணிக்குதான் மிகப் பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்தின் நான்காவது நாள் மற்றும் ஐந்தாவது நாளில் அவர்களுடைய ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தான் ஷேன் வார்னேவும் தனது ட்வீட்டில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.