ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் 65 ரன்களும், பண்ட் 38 பந்துகளில் 56 ரன்கள் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், குல்டர்நைல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதன்பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி டெல்லி அணியின் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டது. இறுதியில் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான ரோகித் சர்மா 51 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இறுதியில் இஷான் கிஷன் 19 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.
இந்நிலையில் மும்பை அணி பெற்ற இந்த மிகச்சிறப்பான வெற்றிக்குப் பின்னர் பல்வேறு முன்னாள் வீரர்களும் மும்பை அணிக்கும், அந்த அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் மும்பை அணி கோப்பையை வென்ற தருணத்தை புகைப்படமாக பகிர்ந்து வாழ்த்தியுள்ளார்.
Ab to aadat si hai sabko aise dhone ki.
The best T 20 franchisee in the world and the best captain in the format. Deserving winners , Mumbai Indians, koi shak.
Amazingly well organised tournament despite various challenges.#IPLfinal pic.twitter.com/yYkRqKtoxQ— Virender Sehwag (@virendersehwag) November 10, 2020
அதில் சேவாக் குறிப்பிட்டதாவது : உலகின் மிகச்சிறந்த டி20 அணி என்றால் அது மும்பை அணி தான் எனவும் சிறந்த கேப்டன் என்றால் அது ரோஹித்தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி வெற்றிக்கு மிகுந்த தகுதியானவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியினர் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.