வங்கதேசத்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் 2 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி ராவில்பிண்டி நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 448/6 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது. அந்த அணிக்கு அப்துல்லா ஷபிக் 2, கேப்டன் ஷான் மசூத் 6, பாபர் அசாம் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் 16/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய பாகிஸ்தானை சௌட் ஷாக்கீல் சதமடித்து 141 ரன்களும் முகமது ரிஸ்வான் சதமடித்து 171* ரன்களும் அடித்து காப்பாற்றினர். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹசன் முகமது தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 2வது நாள் முடிவில் 22/0 ரன்கள் எடுத்துள்ளது.
தடுக்கப்பட்ட சாதனை:
முன்னதாக அப்போட்டியில் பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் மிடில் ஆர்டரில் களமிறங்கி நங்கூரமாக விளையாடினார். நேரம் செல்ல செல்ல நிதானமாக விளையாடி 150 ரன்கள் கடந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் இரட்டை சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது கேப்டன் ஷான் மசூத் தங்களுடைய இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.
அதனால் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்யும் வாய்ப்பை ரிஸ்வான் நழுவ விட்டார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் (211) பதிவு செய்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பராக சாதனை படைப்பதற்கான வாய்ப்பையும் அவர் தவற விட்டார். அதனால் ஏமாற்றமடைந்த ஒரு தரப்பு பாகிஸ்தான் ரசிகர்கள் முகமது ரிஸ்வான் இரட்டை சதமடிக்கக் கூடாது என்பதற்காக கேப்டன் ஷான் மசூட் வேண்டுமென்றே டிக்ளேர் செய்ததாக சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.
ஒரு மணிநேரம்:
இந்நிலையில் 450 ரன்களுக்குள் டிக்ளேர் செய்யப் போகிறோம் என்பதை ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே ரிஸ்வானிடம் கேப்டன் சொல்லிவிட்டதாக பாகிஸ்தான் வீரர் சௌட் ஷாக்கீல் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரிஸ்வான் பாய் இரட்டை சதத்தை பொறுத்த வரை நாங்கள் அவசரப்பட்டதாக கருதவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் டிக்ளர் செய்வோம் என்பதை ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே அவரிடம் சொல்லி விட்டோம்”
இதையும் படிங்க: அவசரப்படுத்தாதீங்க அவர் பொறுமையா வரட்டும்.. வங்கதேச அணிக்கெதிரான தொடரில் ஓய்வு எடுக்கப்போகும் இந்திய வீரர்
“எனவே எப்போது டிக்ளேர் என்ற தெளிவான ஐடியா அவருக்கு இருந்திருக்கும். குறிப்பாக 450 ரன்கள் தொடுவதற்கு முன்பாக டிக்ளர் செய்யப்படும் என்பதை அவருக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டோம்” என்று கூறினார். மொத்தத்தில் முன்கூட்டியே சொல்லியும் முகமது ரிஸ்மான் மெதுவாக விளையாடியதாலயே இரட்டை சத்தத்தை தவற விட்டதாக சௌட் ஷாக்கீல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



