என்ன நம்ப வச்சி ஏமாத்திட்டாங்க. தேர்வுக்குழு செய்த காரியத்தை அம்பலமாக்கிய – சர்ஃபராஸ் கான்

Sarfaraz khan 1
- Advertisement -

வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய கிரிக்கெட் அணி உள்ளது. அதற்காக ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அதிரடியாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் மற்றும் இசான் கிசான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத ரசிகர்கள் சர்பராஸ் கானை ஏன் தேர்வு செய்யவில்லை என்ற கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

sarfaraz 2

ஏனெனில் இஷான் கிசான் மற்றும் சூரியகுமார் ஆகியோர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டாலும் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 45க்கும் குறைவான பேட்டிங் சராசரியில் சுமாராகவே செயல்பட்டுள்ளார்கள். மறுபுறம் கடந்த சில வருடங்களாகவே ரஞ்சி கோப்பையில் முரட்டுத்தனமாக செயல்பட்டு வரும் சர்பராஸ் கான் 80க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியில் சதங்களையும் இரட்டை சதங்களையும் தொடர்ந்து வெளுத்து வாங்கி இந்தியாவுக்காக விளையாட போராடி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக கடந்த 3 சீசனங்களில் முறையே 928, 982, 801 என பெரிய ரன்களை விளாசி வரும் அவர் மொத்தமாக 3380 ரன்களை 80.47 என்ற சராசரியில் குவித்து உலக அளவில் முதல் தர கிரிக்கெட்டில் ஜாம்பவான் டான் பேட்மேனனுக்கு பின் அதிக பேட்டிங் சராசரியை கொண்ட வீரராக சாதனை படைத்து வருகிறார். ஆனாலும் இந்திய டெஸ்ட் அணிக்கு உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையை மையமாக வைத்து அவரை தேர்வு செய்யாமல் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அசத்திய வீரர்களை தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது பலரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது.

Sarfaraz-khan-2

ஏமாத்திட்டாங்க:
முன்னதாக கடந்த வருட ரஞ்சி கோப்பையில் மிரட்டிய சர்ஃபாஸ் கான் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகின. அதற்கு சாட்சியாக ஒரு போட்டியில் சதமடித்த பின் ஒரு தேர்வுக்குழு உறுப்பினர் சர்பராஸ் கானை மைதானத்தில் நேரில் சந்தித்து பேசிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்நிலையில் வங்கதேச தொடரில் தேர்வு செய்யப்படுவேன் என்று தேர்வும்குழு தம்மிடம் வாக்குறுதி கொடுத்ததாக தெரிவிக்கும் சர்பராஸ் கான் ஆஸ்திரேலிய தொடரில் கூட தேர்வு செய்யப்படாதது ஏமாற்றத்தை கொடுப்பதாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அதில் என்னுடைய பெயர் இல்லாததை பார்த்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். உலகில் யாராக இருந்தாலும் என்னுடைய இடத்தில் நிச்சயமாக வருத்தப்படுவார்கள். ஏனெனில் நான் தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடைபெறவில்லை. அதனால் நேற்று முழுவதும் நான் சோகமாக இருந்தேன். குறிப்பாக கௌகாத்தியிலிருந்து டெல்லிக்கு பயணிக்கும் போது ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்ன நடக்கிறது என்பதை நினைத்து தனிமையாக உணர்ந்து அழுதேன்”

Sarfaraz-Khan

“மேலும் கடந்த வருடம் பெங்களூரில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை இறுதி போட்டியில் நான் சதமடித்த பின் தேர்வு குழுவினரை சந்தித்தேன். அப்போது வங்கதேச தொடரில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அதற்காக தயாராக இருக்குமாறும் அவர்கள் என்னிடம் உறுதியளித்தனர். மேலும் சமீபத்தில் நான் சேட்டன் சர்மா அவர்களை மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற சோதனையின் போது சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் எதற்காகவும் வருத்தப்பட வேண்டாம் உங்களுக்கான நேரம் விரைவில் வரும் என்று தெரிவித்தார்”

இதையும் படிங்க: வீடியோ : ஃபீல்டிங் செய்யும் போது மோதிக்கொண்ட இலங்கை வீரர் – மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் பிராத்தனை

“மேலும் நல்லது நடக்க சில காலங்கள் தேவைப்படும் இருப்பினும் நீங்கள் இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பை நெருங்கி விட்டீர்கள். உங்களுக்கான வாய்ப்பை நீங்கள் விரைவில் பெறுவீர்கள் என்று கூறினார். அந்த நிலைமையில் நான் மேலும் சில பெரிய இன்னிங்ஸ் விளையாடிய காரணத்தால் தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அது நடைபெறவில்லை பரவாயில்லை” என்று ஆதங்கத்துடன் கூறினார். இதை பார்க்கும் ரசிகர்கள் ராகுல் போன்ற வீரர்கள் சுமாராக செயல்பட்டும் தொடர்ந்து வாய்ப்பு பெறும் நிலையில் அசத்தலாக செயல்படும் இவருக்கு கொடுத்த வாக்கையாவது தேர்வுக்குழு காப்பாற்ற வேண்டாமா என்று கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement