
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தார். ஆனால் அதன்பிறகு நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் மொத்தமாக சேர்த்து 5 ரன்கள் மட்டுமே அடித்தார். அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் தொடரிலும் முதல் போட்டியில் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக அவர் இரண்டாவது போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு முன்னதாக தனது ஆரம்பகட்ட கரியர் குறித்து பல்வேறு கருத்துக்களை சஞ்சு சாம்சன் பகிர்ந்து கொண்டார். அதில் அவரது தந்தை குறித்தும் சில நெகிழ்ச்சியான கருத்துக்களை அவர் கூறியிருந்தார். அந்தவகையில் அவர் கூறியதாவது :
நான் டெல்லியில் பள்ளியில் படிக்கும்போது என்னுடைய சக நண்பர்கள் டெல்லி கிரிக்கெட் அகாடமி ஜெர்சிகளை அணிந்து விளையாடுவதை பார்ப்பேன். அப்போதுதான் எனக்கு டெல்லி மாநில அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதனால் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு நானும் டெல்லி அணிக்காக விளையாடும் முயற்சியில் அங்கு நடைபெற்ற தேர்வுகளில் கலந்து கொண்டேன்.
ஆனால் டெல்லியில் அதிகப்படியான வீரர்கள் இருந்ததால் போட்டி கடினமாக இருந்தது. ஒருமுறை நான் டெல்லி அணிக்காக நடைபெற்ற தேர்வு ஆட்டத்தில் விளையாடி முடித்து வந்த பிறகு என்னுடைய பெயர் டெல்லி அணியில் இடம் பெறவில்லை. வீட்டுக்கு வந்ததும் எதுவும் சொல்லாமல் சென்று உறங்கி விட்டேன். அப்போது என் தந்தை என் அம்மாவிடம் வந்து நாம் கேரளா செல்லப்போகிறோம் இங்கிருந்து சென்றுவிடலாம் என்று கூறினார். ஆனால் எனது அம்மா பத்தாம் வகுப்பு முடிக்கும் வரை டெல்லியில் இருக்கலாம் என்றும் பின்னர் கேரளா செல்லலாம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பினை வழங்கியது ஏன்? டாசுக்கு பிறகு பேசிய – கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்
ஆனால் எனது அப்பா அந்த முடிவை மறுத்து உடனடியாக கேரளா கிளம்பலாம் என்று மூன்று நாட்களில் எங்களை டெல்லியில் இருந்து கேரளாவிற்கு அழைத்து வந்துவிட்டார். அதன்பிறகு நான் கேரளாவில் உள்ள பள்ளியில் படிக்க துவங்கி அந்த மாநில அணிக்காக விளையாட ஆரம்பித்தேன். தற்போது என்னுடைய கிரிக்கெட் பயணம் கேரளா அணியிலிருந்து இந்திய அணி வரை வந்துள்ளது என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடப்படத்தக்கது.