அந்த காரணத்தால் புதிய வாழ்க்கை கிடைச்சுருக்கு.. இதை விட்றாதீங்க.. சஞ்சுவை வாழ்த்திய சபா கரீம்

Saba Karim 2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஜனவரி 11ஆம் தேதி துவங்குகிறது. வரும் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தேவையான தரமான வீரர்களை கண்டறிவதற்காக நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 14 மாதங்கள் கழித்து விளையாடுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடரில் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, அர்ஷிதீப் சிங் போன்ற இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து உலகக் கோப்பையில் இடம் பிடிக்கும் முனைப்புடன் விளையாட உள்ளனர். அவர்களுக்கு மத்தியில் காலம் காலமாக வாய்ப்புக்கு போராடி வரும் சஞ்சு சாம்சனுக்கு இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடும் பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

புதிய வாழ்க்கை:
சொல்லப்போனால் கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகமான அவருக்கு எப்போதுமே இந்திய அணியில் நிலையான வாய்ப்புகள் கிடைத்ததில்லை. மறுபுறம் தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் சஞ்சு சாம்சனும் சதங்களை அடித்து பெரிய ரன்கள் குவிக்காமல் இருந்து வந்ததால் அவரை கழற்றி விட்ட தேர்வுக் குழு கேஎல் ராகுல் போன்றவர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுத்தது.

அந்த சூழ்நிலையில் கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் முறையாக சதமடித்த சஞ்சு சாம்சன் இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்று தொடர் வாய்ப்புகள் கொடுத்தால் சாதிப்பேன் என்பதை காண்பித்தார். அதன் காரணமாகவே தற்போது 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் கேஎல் ராகுலை கழற்றி விட்ட தேர்வுக் குழு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த புதிய வாழ்க்கையையும் வாய்ப்பையும் வீணடித்து விடாதீர்கள் என்று அவருக்கு முன்னாள் வீரர் சபா கரீம் ஆதரவையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடித்த ஒருநாள் சதம் சஞ்சு சாம்சனுக்கு வாழ்க்கையில் புத்துணர்ச்சியான வாய்ப்பை கொடுத்துள்ளது. இது சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்தியாவை வெற்றி பெற வைத்தது போல் நன்றாக செயல்படுவார்கள் என்பதை காண்பிக்கிறது”

இதையும் படிங்க: பொய் சொல்லிட்டு பார்ட்டிக்கு போனதால் இஷான், ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டார்களா? ராகுல் டிராவிட் பதில்

“வலைப் பயிற்சியில் நீங்கள் பார்த்தால் கூட பின்பகுதியில் அழுத்தத்தை கொடுத்து பேட்டிங் செய்யும் அவரால் பின்னங்காலில் எளிதாக அடிக்க முடிவதை பார்க்க முடியும். அது சாம்சனுக்கு பின்னங்காலில் அதிக பவரை கொடுத்து விளையாட உதவுகிறது. சிறந்த வீரரான அவரிடம் போட்டியை கட்டுப்படுத்தும் திறமையும் நல்ல டைமிங்கும் இருக்கிறது. எனவே 4 அல்லது 5 போன்ற இடத்தில் விளையாடும் 11 பேர் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அந்த வேலையை அவர் சரியாக செய்ய வேண்டும்” என்று கூறினார்.

Advertisement