இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விடை பெற்றார். எனவே அவருடைய இடத்தில் கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது பலரிடமும் வரவேற்பு பெற்றுள்ளது.
ஏனெனில் 2007, 2011 உலகக் கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் கேப்டனாக 2 கோப்பைகளை வென்ற அனுபவத்தைக் கொண்டுள்ளார். மேலும் இந்த வருடம் ஆலோசகராக கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவிய காரணத்தால் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த முடிவு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் ஒரு பக்கம் இந்திய ரசிகர்களிடம் கலக்கத்தையும் ஏற்படுத்துவதாக அமைகிறது.
பழசை மறக்காதீங்க:
ஏனெனில் 2013இல் விராட் கோலியுடன் ஐபிஎல் தொடரில் சண்டையிட்ட கௌதம் கம்பீர் 10 வருடங்கள் கழித்து 2023இல் ஆலோசகராக சண்டையிட்டார். அதே போல ரோகித் சர்மா போன்ற சீனியர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களை இந்திய அணிக்குள் கொண்டுவர கௌதம் கம்பீர் நினைப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். சொல்லப்போனால் அவருடைய அழுத்தத்தாலேயே விராட் கோலி, ரோஹித், ஜடேஜா ஆகியோர் டி20 உலகக் கோப்பை வென்றதும் ஒரே நாளில் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்றதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
அதனால் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்களை கழற்றிவிட வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசுகின்றனர். இந்நிலையில் 2008லயே விராட் கோலிக்கு தம்முடைய ஆட்டநாயகன் விருதை கௌதம் கம்பீர் கொடுத்ததாக அவருடைய பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். அதே போல ரோகித் பெரிய வீரராக வருவார் என்று ஆரம்ப காலத்திலேயே கம்பீர் தம்மிடம் சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே அவர்களுக்கு கம்பீர் போதிய ஆதரவு கொடுப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் மற்றும் ரோஹித்துடன் அவர் கடந்த காலங்களில் நிறைய விளையாடியுள்ளார். நீண்ட காலத்திற்கு முன்பே தன்னுடைய ஆட்டநாயகன் விருதை அவர் விராட் கோலிக்கு கொடுத்துள்ளார். அது கம்பீரின் பொன்னான இதயத்தை காட்டுகிறது. ரோகித் ஒரு நாள் பெரியயாளாக வருவார் என்று அவர் நீண்ட காலத்திற்கு முன்பே என்னிடம் சொன்னார்”
இதையும் படிங்க: இதை செஞ்சா மத்ததெல்லாம் தானா நடக்கும்.. ரவீந்திர ஜடேஜா பற்றிய கேள்விக்கு வாசிங்டன் சுந்தர் பதில்
“ரோஹித் பற்றிய அவருடைய கருத்து தற்போது நிரூபனமாகியுள்ளது. அணிக்கு நல்லதை கொடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதை கம்பீர் தைரியமாக எடுப்பார். எப்போதும் வெற்றிக்காக விளையாடும் அவர் அணியின் கலவைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்தவர். ஒருதலைபட்சமாக இருப்பதை விரும்பாத அவருக்கு பிடித்தது கிரிக்கெட் மட்டுமே” என்று கூறினார்.



