ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் 35வது போட்டி நடைபெற்றது. அதில் குஜராத் அணி டெல்லியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி 20 ஓவரில் 203/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் அக்சர் படேல் 39, ஸ்டப்ஸ் 31, கருண் நாயர் 31, அசுட்டோஸ் சர்மா 37 ரன்கள் எடுத்தனர்.
குஜராத்துக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் விளையாடிய குஜராத்துக்கு சாய் சுதர்சன் 36, ரூத்தர்போர்ட் 43, ஜோஸ் பட்லர் 97* எடுத்தனர். அதனால் 19.2 ஓவரிலேயே விளக்கை தொட்ட குஜராத் ஐந்தாவது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. மறுபுறம் டெல்லி தங்களுடைய 2வது தோல்வியை சந்தித்தது.
20வது ஓவரில் கிசோர்:
முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் பவுலிங் செய்த குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் இடது கை பேட்ஸ்மேன் அக்சர் படேல் விளையாடியதைக் கருத்தில் கொண்டதாக தெரிகிறது. அதனால் பெரும்பாலும் சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்திய அவர் ஸ்பின்னராக ரசித் கானை மட்டுமே பயன்படுத்தினார். அதன் காரணமாக 19 ஓவர்கள் வரை நல்ல ஃபார்மில் இருக்கும் தமிழக வீரர் சாய் கிஷோர் பவுலிங் செய்யவில்லை.
ஆனால் அவருக்கு சுப்மன் கில் மிகவும் கடினமான 20வது ஓவரை வீசும் வாய்ப்பை வழங்கினார். அந்த வாய்ப்பிலும் அபாரமாக பௌலிங் செய்த சாய் கிஷோர் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார். பொதுவாக 20வது ஓவரில் எதிரணி பேட்ஸ்மேன்கள் காட்டுதனமாக அடிப்பதற்கு காத்திருப்பார்கள் என்பதால் பெரும்பாலான கேப்டன்கள் ஸ்பின்னர்களுக்கு பவுலிங் செய்யும் வாய்ப்பை வழங்க மாட்டார்கள்.
ஜெயசூர்யா, ரோஹித்துக்கு பின்:
அதற்கு விதிவிலக்காக சாய் கிஷோர் இந்தப் போட்டியில் குஜராத் இன்னிங்ஸின் 20வது ஓவரை வீசினார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியின் முதல் இன்னிங்ஸில் 20வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய 3வது பவுலர் என்ற தனித்துவமான சாதனைப் பெயரை சாய் கிஷோர் பெற்றுள்ளார். இதற்கு முன் 2009 ஐபிஎல் தொடரில் டர்பன் நகரில் ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பவுலிங் செய்த மும்பைக்கு சனாத் ஜெயசூர்யா 20வது ஓவரை தமது முதல் ஓவராக வீசினார்.
இதையும் படிங்க: என் சதத்தை பற்றி கவலைப்படாதன்னு அவர்கிட்ட சொன்னேன்.. 97 ரன்ஸ் 2 பாய்ண்ட்ஸ் பெற இதான் காரணம்.. பட்லர்
அதே போல 2010 ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அனிக்காக ரோஹித் சர்மா 20வது ஓவரை தனது முதல் ஓவராக வீசினார். அந்த ஜாம்பவான்களுக்குப் பின் தற்போது தமிழக வீரர் சாய் கிஷோர் அந்த தனித்துவமான பெயரை பெற்றுள்ளார்.