அதுக்குள்ள பெரியாளா ஆகிட்டீங்களா? சச்சின், ஸ்ரீநாத்தை பாலோ பண்ணிருந்தா இப்படி ஆகிருக்காது – அர்ஷ்தீபை வெளுக்கும் சபா கரீம்

- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஹர்டிக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலும் 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அதனால் சமனில் இருக்கும் இத்தொடரை வென்று சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலை நிமிர ஜனவரி 7ஆம் தேதியன்று நடைபெறும் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. முன்னதாக புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் இளம் வீரர் அர்ஷிதீப் வெறும் 12 பந்துகளில் ஹாட்ரிக் நோ-பால்கள் உட்பட 5 நோ-பால்களை வீசி 37 ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

Arshdeep SIngh No Ball

பொதுவாகவே கிரிக்கெட்டில் நோபால் போடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என வல்லுனர்கள் தெரிவிப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் நோ-பால்களை வீசிய முதல் இந்திய பவுலர் என்ற மோசமான சாதனை படைத்த அவர் ஒரு போட்டியில் அதிக நோ-பால் வீசிய பவுலர் மற்றும் ஒட்டுமொத்தமாக அதிக நோ-பால் வீசிய பவுலர் என்ற இரட்டை உலக சாதனைகளை படைத்தார். முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் லேசான காயத்தை சந்தித்த அவர் போதியளவு முதன்மை கிரிக்கெட்டில் விளையாடாமல் நேரடியாக 2வது போட்டியில் தேர்வு செய்யப்பட்டு விளையாடியது இந்த தடுமாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

அவ்ளோ பெரியாளாகிட்டீங்களா:
அத்துடன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பை அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்த அவர் அதன் பின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் விளையாடினார். ஆனால் அதன் பின் சுமார் 2 மாதங்களாக எவ்வித உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடாத அவர் தற்போது நேரடியாக விளையாடியதே இந்த தடுமாற்றத்திற்கு முழுமுதற் காரணமாக அமைந்தது. இத்தனைக்கும் அவரைவிட சூப்பர் ஸ்டாராக கருதப்படும் சூரியகுமார் நியூசிலாந்து சுற்றுப்பயணம் முடிந்ததும் வங்கதேச தொடருக்கு முன்பாகவும் பின்பாகவும் இடைவெளி விடாமல் ரஞ்சி கோப்பையில் விளையாடினார்.

Karim

இந்நிலையில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கு பின் விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் விளையாடாததே அர்ஷிதீப் சிங் தடுமாற்றத்திற்கு காரணம் என்று முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சர்வதேச போட்டிகளுக்கு இடையே அர்ஷிதீப் சிங் என் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை? குறிப்பாக அவர் ஏன் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடவில்லை? இவரைப் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் நாம் பொறுமையை காட்ட வேண்டும்”

- Advertisement -

“இவரை போன்ற வீரர்களை வைத்து புதிய அணியை உருவாக்குவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும். தற்போதைய இளம் அணியில் நிறைய மாற்றங்கள் நிகழ்கிறது. அதனால் இளம் வீரர்கள் நிறைய தவறுகளையும் செய்கிறார்கள். இருப்பினும் அந்த தவறுகளால் தான் அவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். இப்போட்டி மட்டுமல்லாது அடுத்த சில போட்டிகளிலும் இதுபோன்ற மேடு பள்ளங்கள் நமது அணியில் இருக்கத்தான் செய்யும். இருப்பினும் அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று கூறினார்.

Sodhi

அதே நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு முன்னாள் வீரர் ரீதிண்டர் சோதி முன்பெல்லாம் இந்தியாவுக்காக விளையாடாத சமயங்களில் தங்களுடைய மாநில அணிகளான மும்பை, கர்நாடகா அணிகளுக்கு ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ஜவகல் ஸ்ரீநாத் விளையாடியதாக கூறினார். ஆனால் அர்ஷிதீப் போன்ற இப்போதுள்ள சில இளம் வீரர்கள் அறிமுகமான 6 மாதத்திலேயே உள்ளூர் கிரிக்கெட்டை எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ந்து விட்டார்களா என்றும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்கIND vs SL : 3வது டி20யில் தடுமாறும் கில்லுக்கு பதிலாக பார்முடன் பெஞ்சில் உள்ள அவருக்கு சான்ஸ் கொடுங்க – வாசிம் ஜாபர் கோரிக்கை

“சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் இந்தியாவுக்காக விளையாடாத காலங்களில் தங்களது மாநில அணிகளான மும்பை மற்றும் கர்நாடகா அணிகளுக்கு விளையாடுவார்கள். அதனால் பார்மை தக்க வைத்துக் கொண்டு அவர்கள் நிறைய காலங்கள் இந்திய அணிக்காக விளையாடினார்கள்” என்று கூறினார். இப்படி விமர்சனங்களை சந்தித்துள்ள அர்ஷிதீப் 3வது டி20 போட்டியில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement