2007-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை தவறவிட்ட இந்திய கிரிக்கெட் அணியானது அதே ஆண்டு அறிமுகமான டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடியது. அந்த தொடரில் இந்திய அணியில் சீனியர் வீரர்கள் யாரும் இடம்பெறாத வேளையில் தோனி தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அனைத்து அணிகளையும் வீழ்த்தி அந்த டி20 உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
1983-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி ஐசிசி உலக கோப்பையை கைப்பற்றிய பிறகு இந்திய அணி பெற்ற இரண்டாவது உலகக் கோப்பை வெற்றியாக அந்த வெற்றி வரலாற்றில் பதிக்கப்பட்டது. ஐசிசி நடத்திய அறிமுகத் தொடரிலேயே டி20 உலக கோப்பை தொடரை வென்ற தோனியின் தலைமையிலான இந்திய அணிக்கு அப்போது பாராட்டுகளும் குவிந்தது.
ஏனெனில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருந்தே இந்திய அணி கோப்பையை கைப்பற்ற முடியாத வேளையில் தோனி தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணி முதல் முறையாக கோப்பையை வென்று அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்தது. அதேவேளையில் அந்த இறுதிப் போட்டியின் கடைசி ஓவரை ஜோஹிந்தர் சர்மா வீசியது குறித்து இன்றளவு பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் டி20 உலக கோப்பை தொடரின் இறுதி ஓவரை ஜோஹிந்தர் சர்மா வீசுவதற்கு முன்பாக தோனி சில தவறான முடிவுகளை எடுத்து விட்டார் என்று ஆர்.பி சிங் சமீபத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : தோனிக்கு இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை வீசுவதை விட 18 மற்றும் 19-வது ஓவர்தான் முக்கியம் என்று நினைத்தார்.
ஏனெனில் மிஸ்பா கடைசிவரை நிற்பார் என்று தோனி நினைக்கவே இல்லை. ஆனால் தோனியின் திட்டங்களை எல்லாம் தகர்த்து மிஸ்பா கடைசி ஓவர் வரை களத்தில் இருந்தார். தோனி அதற்கு முன்னதாகவே மிஸ்பாவை வீழ்த்தி விடலாம் என்று சில கணிப்புகளை தவறாக செய்துவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்திய மிஸ்பா ஹர்பஜன் சிங் வீரசிய 17-வது ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்க விட்டார். அதன் பிறகு 18 மற்றும் 19வது ஓவரை ஸ்ரீசாந்த்தும் நானும் வீசினோம்.
இதையும் படிங்க : நீங்க ஸ்லெட்ஜிங் செய்றது என்ன புதுசா? பாத்துக்கலாம் வாங்க – ஸ்டீவ் ஸ்மித், இயன் ஹீலிக்கு அஷ்வின் கொடுத்த பதிலடி என்ன
இதனால் 20-வது ஓவரை யாருக்கு கொடுப்பது என்ற குழப்பமே இருந்தது முதலில் ஹர்பஜன் இடம் பந்தை கொடுத்தாலும் அவர் ஏற்கனவே கடைசியாக வீசிய ஓவரில் 19 ரன்களை விட்டுக் கொடுத்தார் என்பதனாலேயே ஜோஹிந்தர் சர்மாவை பந்துவீச தோனி அழைத்திருந்தார். ஒருவேளை இடது கை பேட்ஸ்மேன் களத்தில் இருந்திருந்தால் தோனி ஹர்பஜனை தான் பந்துவீச அழைத்திருப்பார் என்றும் ஆர்.பி சிங் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.