உலக கோப்பை தொடரின் 44 ஆவது லீக் போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதின.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 264 ரன்களை குவித்தது அதிகபட்சமாக மேத்யூஸ் 113 ரன்கள் குவித்தார்.
பிறகு 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர். ஆட்ட நாயகனாக ரோகித் தேர்வானார்.
போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ரோகித் சர்மா கூறியதாவது : என்னுடைய சாதனைகள் பற்றி நான் எப்போதும் நினைத்ததே இல்லை. வழக்கம் போல மைதானத்திற்கு சென்று போட்டியில் மட்டுமே கவனமாக இருந்தேன். நன்றாக விளையாடினால் இதெல்லாம் நடக்கும் என்று தெரியும் ஆனால் ஆடும்போது நான் தேர்ந்தெடுக்கும் சாட்டுகள் ரொம்ப முக்கியம் அதை என் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
அடிக்கக்கூடிய ஷாட்களை மட்டும் தேர்வு செய்து ஆடினேன் அதனால் தொடர்ந்து சதங்கள் அடிக்க முடிகிறது. முந்தய தவறுகளில் இருந்து கற்ற பாடம் இது. கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய நாள்தான் ஒவ்வொரு போட்டியும் புதிய போட்டியாகவே நான் பார்க்கிறேன். என்னை சுற்றி இருப்பவர்கள் சதத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இந்த சதத்தை பற்றி நான் பெரிதாக யோசிப்பதில்லை என்று ரோகித் சர்மா கூறினார்.