இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வேகப்பந்து வீச்சாளருமான மலிங்கா கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 101 விக்கெட்டுகளையும், 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 338 விக்கெட்டுகளையும், 84 20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 107 விக்கெட்டுகளையும் சர்வதேச அரங்கில் வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடர்களில் 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் நேற்று சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமின்றி அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வினை அறிவித்த மலிங்காவிற்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா மலிங்காவிற்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக மும்பை அணிக்காக முக்கியமான வீரராக பங்கேற்று விளையாடி வந்த மலிங்கா ரோகித் சர்மாவின் தலைமையில் வெற்றி பெற்ற ஐந்து ஐபிஎல் தொடரின்போதும் அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மலிங்காவின் ஓய்வுக்கு பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் அவரைப் பாராட்டி ரோகித் பதிவிட்டுள்ள அந்தக் கருத்தில் : மலிங்கா நீங்கள் ஒரு சாம்பியன் கிரிக்கெட்டர்.
Mali, you have been a champion cricketer. Well done on your wonderful career. Best wishes ahead @ninety9sl https://t.co/fDGOg1ZBT7
— Rohit Sharma (@ImRo45) September 14, 2021
உங்களது கரியரில் நீங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு உள்ளீர்கள். இனிவரும் உங்களது வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் ரோகித்சர்மா கருத்தினை பகிர்ந்துள்ளார்.
மும்பை அணிக்காக பல பத்து ஆண்டுகள் விளையாடிய மலிங்கா மும்பை அணியின் நட்சத்திர வீரராக விளையாடி வந்தார். ஏற்கனவே மலிங்கா குறித்து ரோகித் சர்மா பேசுகையில் : மும்பை அணியில் அவரது இடத்திற்கான மாற்று வீரர் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அந்த அளவிற்கு அவர் ஒரு அற்புதமான வீரர் என்று பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.