சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான தோல்விக்கு இதுவே முக்கிய காரணம் – ரோஹித் சர்மா ஓபன் டாக்

Rohith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியாக 56வது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை குவித்தது.

SRHvsMI

- Advertisement -

அதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் என 41 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 36 ரன்களையும், இஷான் கிஷன் 33 ரன்களை குவித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக சந்தீப் சர்மா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஹோல்டர் 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், நதீம் 4 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 17.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 151 ரன்களை குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றில் வாய்ப்பை தக்க வைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான வார்னர் மற்றும் சஹா இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 85 மற்றும் 58 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சபாஷ் நதீம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

saha

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ரோகித் சர்மா கூறுகையில் : இந்த நாளை நாங்கள் நினைவில் வைக்க விரும்பவில்லை. இந்தத் தொடரின் மிக மோசமான செயல்பாடு இந்தப்போட்டியில் தான் வந்துள்ளது. இந்த போட்டியில் சில முயற்சிகளை நாங்கள் செய்ய நினைத்தோம். ஆனால் அது எங்கள் வழியில் வரவில்லை. அதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த போட்டியின் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இன்று நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடவில்லை.

srh

சிறிய இடைவெளிக்குப் பிறகு நான் மீண்டும் விளையாட வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் நான் சில போட்டிகளை விளையாட இருக்கிறேன். அதற்கப்புறம் காயத்தின் தன்மை குறித்து பார்க்கலாம். எப்பொழுதும் கடந்த போட்டியை பற்றி நினைக்காமல் அடுத்து வர இருக்கும் போட்டிக்காக போகஸ் உடன் இருக்க வேண்டும். டெல்லி சிறப்பான அணி அவர்களை எதிர்கொள்வது ஒரு சிறந்த சவாலாக இருக்கும் என நினைக்கிறேன் என்று ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement