ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்த வேளையில் பாகிஸ்தானுக்கு எதிராகவும் வெற்றியை பெற்றிருந்தது.
குறிப்பாக நியூயார்க் நகரில் நடைபெற்று முடிந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்ட வேளையில் 120 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கு பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இந்திய அணியின் அபார பந்துவீச்சு மற்றும் பீல்டிங் செயல்பாடுகள் காரணமாக பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முழுவதுமாக பேட்டிங் செய்ய முடிந்தும் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
அந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய பும்ரா 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சாத்தியமே இல்லாத போட்டியை வென்று கொடுத்த பும்ராவை பாராட்டி பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் :
பும்ரா பந்துவீச்சில் ஒரு மேதை போன்றவர். முதல் பாதி எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை என்றாலும் இரண்டாவது பாதியில் பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக பும்ரா செயல்பட்ட விதம் உண்மையிலேயே மிகப் பிரமாதமாக இருந்தது. இந்த உலகக் கோப்பை முழுவதும் அவர் இதே மனநிலையுடன் இருக்க விரும்புகிறேன்.
இதையும் படிங்க : இந்தியா டி20 உலகக் கோப்பை ஜெயிக்கனும்ன்னா.. நம்பர் ஒன் பிளேயரான அவர் அசத்தனும்.. அனில் கும்ப்ளே பேட்டி
அப்படி அவர் இதே பார்மில் தொடர்ந்து செயல்பட்டால் நிச்சயம் நம்மால் இந்த தொடரை கைப்பற்ற முடியும். இது ஆரம்பம்தான் இன்னும் சில தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. எனவே இந்த பார்மை நாங்கள் தொடர விரும்புகிறோம். நிச்சயம் இந்திய அணி திரும்ப செல்லும்போது கோப்பையுடன் தான் செல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பதாகவும் உள்ளது.