இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்கு பலரது மத்தியிலும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டிகளில் 2027 உலக கோப்பை வரை தொடர்ச்சியாக விளையாடி இந்திய அணிக்காக ஒருநாள் உலகக் கோப்பை வென்ற கையோடு ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்றும் அவரை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
தோனியின் மீதுள்ள விசுவாசத்தை காட்டிய ரோஹித் சர்மா :
இந்திய அணிக்காக கடந்த 2013 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான ரோகித் சர்மா இதுவரை இந்திய அணிக்காக 67 போட்டிகளில் விளையாடி 12 சதம் மற்றும் 18 அரை சதங்களுடன் 4301 ரன்களை குவித்துள்ளார். அதோடு இந்திய அணியை 24 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகவும் வழிநடத்தியுள்ளார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஐசிசி கோப்பையை கைப்பற்றி கொடுத்த அவர் இம்முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டதாலே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அந்த அறிவிப்பில் தோனியின் மீது வைத்துள்ள விசுவாசத்தை உணர்த்தும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அது குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தினை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி இரவு 7 : 29 மணிக்கு தனது ஓய்வு முடிவை எவ்வித ஆர்பாட்டமுமின்றி அறிவித்தார். அந்த வகையிலேயே ரோஹித் சர்மாவும் மே 7-ஆம் தேதி இரவு 7 : 29 மணிக்கு தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க : நாங்க ரோஹித் சர்மாவின் அந்த முடிவில் எந்த பிரஷரும் குடுக்கல.. இதுதான் உண்மை – ராஜிவ் சுக்லா விளக்கம்
தனது கரியரின் ஆரம்பத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடி வந்து ரோகித் சர்மாவை துவக்க வீரராக மாற்றி அவரது கரியரையே தோனி தான் பிரகாசிக்க வைத்தார். அப்படி தன்னுடைய கரியரை மாற்றிய கேப்டனுக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே ரோகித் சர்மா அதே நேரத்தில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.