இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையில் வென்ற இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது. குறிப்பாக அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் நட்சத்திரங்கள் களமிறங்குகிறார்கள். இருப்பினும் இத்தொடரில் காயமடைந்த ரிஷப் பண்ட் இல்லாத நிலையில் தொடக்க வீரராக தடவலாக செயல்பட்டு துணை கேப்டன் பதவியை இழந்து விமர்சனங்களை சந்தித்த கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே கேப்டன் ரோகித் சர்மாவுடன் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அந்த இடத்தில் சுப்மன் கில் மற்றும் இசான் கிசான் ஆகிய இருவர் போட்டியில் உள்ளனர். அதில் 2019இல் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி சுமாராக செயல்பட்டு காயத்தால் வெளியேறிய சுப்மன் கில் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் முதல் கோப்பை வெல்லும் அளவுக்கு அதிக ரன்கள் குவித்தார். அதனால் மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் தொடர்நாயகன் விருதை வென்று இந்தியாவின் அடுத்தடுத்த ஒய்ட்வாஷ் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றினார்.
ரோஹித்தின் பதில்:
மறுபுறம் 2022 ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டு விமர்சனங்களை சந்தித்த இசான் கிசான் அதன்பின் இந்தியாவுக்காக விளையாடிய கிரிக்கெட் போட்டிகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதன் உச்ச கட்டமாக கடந்த மாதம் வங்கதேசம் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் கடைசி போட்டியில் அடித்து நொறுக்கிய அவர் 210 ரன்களை விளாசி ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரர் என்ற உலக சாதனைகளை படைத்தார்.
அந்த வகையில் இருவருமே நல்ல பார்மில் இருந்தாலும் விக்கெட் கீப்பராகவும் அதிரடியாகவும் செயல்படக்கூடிய இசான கிசான் இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதால் ரோஹித் சர்மாவுடன் களமிறங்கினால் எதிரணிக்கு சவாலை கொடுப்பார் என்று ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். இருப்பினும் நிலையான இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு அவருக்கு முன்பே அசத்திய சுப்மன் கில் தான் இந்தத் தொடரில் தம்முடன் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று ரோகித் சர்மா அறிவித்துள்ளார். இது பற்றி முதல் போட்டிக்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு.
“இருவருமே சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். ஆனால் தற்போது இருவரும் செல்லும் விதத்தை பார்க்கும் போது சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பது நியாயமாகத் தெரிகிறது. ஏனெனில் கடைசியாக விளையாடிய போட்டிகளில் அவர் நிறைய ரன்களை குவித்துள்ளார். அதே சமயம் இசான் கிசானிடம் இருந்து தற்போதைக்கு நான் எதையும் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. அவரும் எங்களுக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக இரட்டை சதமடித்து அவர் படைத்துள்ள சாதனையின் அருமையை நான் நன்றாக அறிவேன்.
Captain @ImRo45 was all praise for youngsters @ShubmanGill & @ishankishan51 ahead of the #INDvSL ODI series starting tomorrow 👌🏻👌🏻@mastercardindia pic.twitter.com/vlZyeGpChP
— BCCI (@BCCI) January 9, 2023
“இருப்பினும் யார் முதலில் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதை அடிப்படையாக வைத்து முதலில் அசத்தியவர்களுக்கு தேவையான வாய்ப்பு கொடுப்பதே நியாயமாகும். அந்த வகையில் இசான் கிசானுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாமல் போவது துரதிஷ்டவசமாகும். ஆனால் கடந்த 8 – 9 மாதங்களில் எப்படி அனைத்தும் மாறியது என்பதை வைத்தும் ஒருநாள் கிரிக்கெட்டில் நாங்கள் எந்த வழியில் முன்னேற நினைக்கிறோம் என்பதை வைத்தும் சுப்மன் கில் வாய்ப்பை பெறுகிறார். அவர் அந்த இடத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: இப்டி நடக்கும்னு அப்போவே தெரியும், இலங்கை தொடரிலிருந்து திடீரென வெளியேறிய நட்சத்திர வீரர் – ரசிகர்கள் கோபம்
“அதே சமயம் நாங்கள் அனைத்து வீரர்களுக்கும் கலவையாக இத்தொடரில் வாய்ப்பு கொடுக்க உள்ளோம். எனவே வரும் காலங்களில் இதைப் பற்றி நாம் மேலும் முடிவெடுப்போம். நமக்கு இன்னும் நிறைய போட்டிகள் வர காத்திருக்கிறது” என்று கூறினார். அதாவது இஷான் கிஷான் அசத்தியதற்கு ஒரு சில மாதங்கள் முன்பாகவே சுப்மன் கில் அசத்தியதால் அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று ரோஹித் கூறியுள்ளார்.


