இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா சர்வதேச அரங்கில் உலக அளவில் சிறந்த பேட்ஸ்மேன்களின் ஒருவராக போற்றப்படுகிறார். ஆரம்பக் காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாற்றமாக செயல்பட்ட அவர் துவக்க வீரராக களமிறங்கியது முதல் அபாரமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஓப்பனிங் வீரராக எதிரணிகளை பந்தாடும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
அதே போல ஒரு உலகக் கோப்பையில் 5 சதங்கள், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராகவும் இரட்டை உலக சாதனை படைத்துள்ள அவர் 2019 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். அந்த வகையில் நவீன கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு தரத்தை கொண்ட அவர் தற்போது இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை சந்தித்துள்ளார்.
கஷ்டமான பவுலர்:
இந்நிலையில் தென்னாபிரிக்க முன்னாள் ஜாம்பவான் வீரர் டேல் ஸ்டைன் தாம் எதிர்கொண்ட பவுலர்களில் மிகவும் கடினமானவர் என்று ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். அதனால் போட்டிக்கு முன்பாக 100 முறை அவருடைய பழைய வீடியோக்களை பார்த்து விட்டு தான் பேட்டிங் செய்ய செல்வேன் என்று தெரிவிக்கும் ரோஹித் சர்மா இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “பேட்டிங் செய்ய செல்வதற்கு முன்பாக அவருடைய வீடியோக்களை 100 முறை போல பார்ப்பேன்”
“அது டேல் ஸ்டைன். அவர் இந்த விளையாட்டின் லெஜெண்ட். தம்முடைய கேரியரில் அவர் சாதித்துள்ளதை பார்ப்பது சூப்பராக இருக்கும். அவரை நான் பலமுறை எதிர்கொண்டுள்ளேன். அவர் மிகவும் வேகமானவர். பந்தை அதிக வேகத்தில் ஸ்விங் செய்வார். அது மிகவும் கடினமாகும். அவர் கடினமான போட்டியை கொடுக்கக்கூடிய போட்டியாளர்”
“களத்தில் தாம் விரும்பும் விஷயங்களை செய்யக்கூடிய அவர் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியை பெற்றுக் கொடுக்கக் கூடியவர். எனவே அவருக்கு எதிராக விளையாடியது நன்றாக இருந்தது. அவருக்கு எதிராக நான் பெரிய அளவில் வெற்றிகரமாக செயல்பட்டதில்லை. இருப்பினும் அவருக்கு எதிரான போட்டியை நான் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல அதிரடியான வேகத்தில் பந்து வீசக்கூடிய ஸ்டைன் சர்வதேச கிரிக்கெட்டில் 699 விக்கெட்டுகள் எடுத்த பெருமைக்குரியவர்.
இதையும் படிங்க: எஞ்சிய ஐ.பி.எல் தொடரில் இருந்து பஞ்சாப் அணியின் முக்கிய வீரர் விலகல் – யார் அந்த வீரர்?
சச்சின் டெண்டுல்கர் போன்ற உலகின் மகத்தான பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்த அவர் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இருப்பினும் ரோஹித் சர்மாவை அவர் ஒருமுறை மட்டுமே 2013 டர்பன் டெஸ்ட் போட்டியில் அவுட்டாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பை இந்தியாவின் கேப்டனாக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.