உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக தற்போது பரவி வருகிறது. இந்த கொரோனோ வைரஸ் தடுப்பு பணிக்காக பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்களும் மக்களிடம் நிவாரண நிதி கேட்டு பெற்று வருகின்றனர். அதன்படி இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் 59 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.
அதில் 35 லட்ச ரூபாய் பிரதமர் நிவாரண நிதிக்கும், 24 லட்ச ரூபாய் மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கும் நன்கொடையாக வழங்கினார். இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் மூன்றாம் கட்ட நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வைரஸ் பாதிப்பினால் இந்தியாவில் இதுவரை 5000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் இதனை மேலும் நீட்டிக்க மத்திய அரசு அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
மேலும் இந்த பாதிப்பை தடுக்க பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதி உதவியை தாராளமாக வழங்கலாம் என்று பிரதமர் மோடி பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கிரிக்கெட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், திரைநட்சத்திரங்கள், பிரபலங்கள், தன்னார்வ தொண்டர்கள் என பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர்களில் கிரிக்கெட் வீரர்களில் இதுவரை கங்குலி, சச்சின், விராட் கோலி, ரோகித் சர்மா ரகானே, ஹர்பஜன், பதான் சகோதரர்கள் என பலரும் தங்களால் இயன்ற நிதி உதவி கொடுத்து உள்ளனர். இந்நிலையில் தற்போது கவாஸ்கர் கொடுத்த 59 லட்ச ரூபாயும் நோய் தடுப்பு நிதியாக கணக்கில் கொள்ளப்பட்டது. மற்றவர்கள் ஒரு தொகையை அளிக்க இவர் மட்டும் 59 லட்ச ரூபாயை குறிப்பிட்டு அளிக்க என்ன காரணம் என்று ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு பதிலளித்த அவரது மகனும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரோகன் கவஸ்கர் அளித்துள்ள விளக்கத்தில் : கடந்த வாரமே நாங்கள் கொரோனா நிவாரண நிதியை வழங்கி விட்டோம் அதில் ஏன் அந்த 59 லட்சம் ரூபாய் வழங்கினோம் என்றால் இந்தியாவுக்காக அவர் அடித்த 35 சதங்களுக்காக 35 லட்ச ரூபாயை பிரதமர் நிதிக்கும், மும்பை அணிக்காக அடித்த 24 சதங்களுக்காக 24 லட்ச ரூபாய் மும்பை மாநில நிவாரண நிதிக்கு வழங்கினோம் என்றார். மேலும் எல்லோரும் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.