இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் 2007 டி20 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது. இருப்பினும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதையும் வென்று வந்த அவரால் முன்பு போல் அசத்த முடியவில்லை. அதனால் தோனி அவரை கழற்றி விட்டு கேரியரை முடித்ததாக கடந்த காலங்களில் சில முன்னாள் வீரர்களும் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங்கும் விமர்சித்துள்ளார்கள்.
இந்நிலையில் 2017ஆம் ஆண்டு முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தான் சாம்பியன்ஸ் ட்ராபியுடன் யுவராஜ் சிங்கை கழற்றி விட்டதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இது பற்றிய பின்னணியை அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியின் கேப்டன்ஷிப் ஸ்டைல் நீங்கள் அவருடைய லெவலுக்கு இருக்க வேண்டும் என்பது போல் இருக்கும்”
உத்தப்பா ஆதங்கம்:
“ஃபிட்னஸ், சாப்பாடு, கேட்பது, ஒப்புக் கொள்வது உட்பட அனைத்தும் அவரைப் போலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இங்கே இரண்டு வகையான கேப்டன்கள் உண்டு. ஆனால் தனிப்பட்ட நபர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது வித்தியாசமானது. எடுத்துக்காட்டாக யுவி பாவை எடுத்துக் கொள்ளுங்கள். புற்றுநோயை தோற்கடித்த அந்த மனிதர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் கம்பேக் முயற்சி செய்தார்”
“அவர் மற்ற வீரர்களுடன் சேர்ந்து நமக்கு 2 உலக கோப்பைகளை வென்று கொடுத்தார். அந்த 2 வெற்றிகளில் அவருடைய பங்கு அளப்பரியது. அப்படிப்பட்ட ஒரு வீரருக்கு நீங்கள் கேப்டனாகும் போது அவருடைய நுரையீரல் திறன் குறைந்து விட்டது என்று அவரிடம் சொல்கிறீர்கள். உண்மையில் தடுமாறிய அவருக்கு நீங்கள் தான் ஆதரவாக இருந்திருக்க வேண்டும்”
கழற்றி விட காரணம்:
“ஆனால் கேப்டனான நீங்கள் அதை செய்யாமல் உங்களுடைய அளவீடுகளை மட்டுமே பார்த்தீர்கள். உண்மையில் யுவராஜ் போன்ற சில வீரர்களுக்கு விதிமுறையில் விதிவிலக்குகள் இருக்கும். அவர் அந்த வாய்ப்புக்காக தகுதியானவர். ஏனெனில் அவர் உலகக் கோப்பைகளை மட்டுமின்றி புற்றுநோயையும் வீழ்த்தியவர். அதனால் ஃபிட்னஸ் சோதனையில் தமக்கு 2 புள்ளிகளை குறைத்துக் கொள்ளுமாறு யுவராஜ் கேட்டுக்கொண்டார். பின்னர் பிட்னஸ் சோதனையில் தேர்வாகி அணிக்குள் வந்த அவர் கொஞ்சம் சுமாராக செயல்பட்டார். அப்போதிலிருந்து யுவராஜ் இந்திய அணியில் பழையது போல் நடத்தப்படவில்லை”
இதையும் படிங்க: இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் ஜெய்ஸ்வால் தான்.. அதுக்கு என்ன காரணம் தெரியுமா – தினேஷ் கார்த்திக்
“அந்த சமயத்தில் கேப்டனாக இருந்த விராட் கோலி வலுவான பர்சனாலிட்டி கொண்டவராக இருந்தார். எனவே அந்த சூழ்நிலை அவராலேயே ஏற்பட்டிருக்கும். விராட் தலைமையில் நான் விளையாடியதில்லை. ஆனால் அவர் எப்போதும் என்னுடைய வழியில் அனைவரும் உயர்தரமாக செயல்பட வேண்டும் என்று விரும்புவார். இருப்பினும் உங்கள் அனைத்து வீரர்களும் அப்படியே இருக்க மாட்டார்கள். எனவே அவர்களை தனிப்பட்ட முறையில் எப்படி நடத்துகிறீர்கள் என்பது முக்கியம். ஏனெனில் இவை அனைத்தும் வெற்றிகளை மட்டுமே பொறுத்தது கிடையாது” என்று கூறினார்.