இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது அண்மையில் இலங்கையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது மூன்று போட்டியிலுமே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியிருந்தனர்.
அதனை தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது இன்று ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் கொழும்பு நகரில் துவங்கி நடைபெற இருக்கிறது.
டி20 உலககோப்பை தொடர் முடிந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை சேர்ந்த 22 வயதான இளம் வீரரான ரியான் பராக் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்த பராக் அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். அவரது இந்த செயல்பாடு இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை வெகுவாக கவர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பந்துவீச்சிலும் கை கொடுக்கக்கூடிய பேட்ஸ்மேனான ரியான் பராக்கிற்கு ஒருநாள் கிரிக்கெட்டிலும் வாய்ப்பு வழங்க கௌதம் கம்பீர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் அவர் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : அவரோட பேச்சை கேட்டது தப்பா போச்சு.. சூப்பர் ஓவருக்கே போகாம ஜெய்க்க வேண்டியா மேட்ச்.. ஜெயசூர்யா வருத்தம்
அதேபோன்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான இடத்தில் கே.எல் ராகுலுக்கே முன்னுரிமை அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருப்பினும் இன்று துவங்கும் இந்த போட்டியில் இந்திய அணியே வெற்றி பெற அதிக சாதகம் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.