இந்திய அணியில என்னோட ரோல் இதுதான்.. தெளிவாக இருக்கேன்.. அதுவே என் அதிரடிக்கு காரணம் – ரிங்கு சிங் பேட்டி

Rinku-Singh
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே கடந்த நவம்பர் 23-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களின் முடிவில் 191 ரன்களை மட்டுமே எடுத்தது.

- Advertisement -

அதன் காரணமாக இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு வெற்றியை ருசித்தது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக ஐந்தாவது வீரராக களமிறங்கி 9 பந்துகளை சந்தித்த ரிங்கு சிங் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 31 ரன்கள் குவித்து அசத்தினார். அதிலும் குறிப்பாக 19-வது ஓவரில் இரண்டு சிக்சர் மற்றும் மூன்று பவுண்டரி என அதிரடியில் வெளுத்து கட்டினார்.

இறுதி நேரத்தில் அவரது அதிரடி காரணமாக இந்திய அணி ஒரு கட்டத்தில் 210 முதல் 215 ரன்கள் வரை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் அணியின் எண்ணிக்கையை 235 ரன்கள் வரை கொண்டு சென்றார். அவரது இந்த அதிரடி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ள வேளையில் இந்த போட்டியில் இப்படி அதிரடியாக விளையாட என்ன காரணம் என்பது குறித்தும் போட்டி முடிந்த பிறகு ரிங்கு சிங் பேசியிருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் இந்திய அணியில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் தற்போது விளையாடி வருகிறேன். எனவே இறுதி கட்டத்தில் பதட்டமடையாமல் நிதானமாக இருந்து சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். நான் பந்திற்கு மரியாதை கொடுத்து விளையாடுகிறேன். அதனால் என்னால் பந்தை பார்த்து அதற்கேற்றார் போல் அடிக்க முடிகிறது. சூரியகுமார் யாதவ் மிகச்சிறப்பாக அணியை வழி நடத்துகிறார்.

இதையும் படிங்க : தோல்வியடைந்த பிறகு பரிசளிப்பு விழாவிற்கு கூட வராத ஆஸி கேப்டன் மேத்யூ வேட் – என்ன ஆனது? (கோச் கொடுத்த விளக்கம்)

இளம் வீரர்களை கொண்ட எங்கள் அணி மிகவும் மகிழ்ச்சியுடன் தற்போது விளையாடி வருகிறோம். கடைசி கட்ட 5 ஓவர்களில் விளையாடுவது தான் இந்திய அணியில் என்னுடைய ரோல். எனவே நான் போட்டிகளை பினிஷிங் செய்து கொடுக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அப்படி பயிற்சியில் என்னால் சிறப்பாக செயல்பட முடிவதால் தான் போட்டியிலும் இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாட முடிகிறது என ரிங்கு சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement