இறுதிபந்து வரை ரசிகர்களின் பல்ஸ்ஸை எகிற வைத்த லக்னோ – கொல்கத்தா போட்டி – இறுதியில் யாரு ஜெயித்தது?

LSG vs KKR 3
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் அனல் பறந்து வரும் நிலையில் மே 18-ஆம் தேதி நடைபெற்ற 66-ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நவி மும்பையில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். பவர்பிளே ஓவர்களில் மிரட்டிய இந்த ஜோடி கொல்கத்தா பவுலர்களை புரட்டி எடுக்க தொடங்கி ஒவ்வொரு ஓவரிலும் 10 ரன்களுக்கு மேல் தொடர்ந்து எடுத்து வந்தது.

Quinton De Kock KL Rahul 2

- Advertisement -

ஒரு கட்டத்தில் இருவருமே அரைசதம் கடந்தும் 10 ஓவர்கள் தாண்டியும் 100 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் அடம்பிடித்த இந்த ஜோடியை பிரிக்க கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் போட்ட அத்தனை திட்டங்களையும் தவிடு பொடியானது. நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்திய இந்த ஜோடி கொல்கத்தா பவுலர்களுக்கு கொஞ்சம் கூட கருணை காட்டாமல் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டு பந்தாடியது.

மிரட்டல் பார்ட்னர்ஷிப்:
ஒரு கட்டத்தில் அதிரடி காட்டுவதை நிறுத்திய கேப்டன் ராகுல் கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்ய மறுபுறம் விஸ்வரூபம் எடுத்த குயின்டன் டி காக் சதம் அடித்தும் திருப்தி அடையாமல் கொல்கத்தா பவுலர்களை முரட்டுத்தனமாக அடித்து பிரித்து மேய்ந்தார். இறுதி வரை இந்த ஜோடியை பிரிக்க முடியாத கொல்கத்தா கதறிய நிலையில் 10 பவுண்டரி 10 சிக்சருடன் 70 பந்துகளில் குயின்டன் டி காக் 140* ரன்களும் கேஎல் ராகுல் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 68* (51) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். அதனால் 20 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட இழக்காத லக்னோ 210/0 ரன்கள் குவித்தது.

Quinton De Kock KL Rahul 2

கடந்த 2008 முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் முதலில் பேட்டிங் செய்த அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 20 ஓவர்களும் முழுவதுமாக விளையாடி 200 ரன்களை எடுப்பது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த ஜோடியாக குயின்டன் டி காக் – கேஎல் ராகுல் ஜோடி புதிய வரலாற்று சாதனை படைத்தனர். இதற்கு முன் கடந்த 2019இல் பெங்களூருக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணிக்காக டேவிட் வார்னர் – ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் 185 ரன்கள் எடுத்திருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

- Advertisement -

கொல்கத்தா போராட்டம்:
பந்துவீச்சில் மொத்தமாக சொதப்பிய கொல்கத்தா அதை தொடர்ந்து 211 என்ற பெரிய இலக்கை துரத்திய போது வெங்கடேஷ் ஐயர் 0, அபிஜித் தோமர் 4 (8) என அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் தோல்வியை சந்திப்பது உறுதி என்ற நிலைமை ஏற்பட்டது. இருப்பினும் அடுத்து வந்த நித்திஸ் ராணா அதிரடியாக 9 பவுண்டரியுடன் 42 (22) ரன்களும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 50 (29) ரன்களும் எடுத்து முடிந்த அளவுக்கு போராடி ஆட்டமிழந்தனர். அந்த நிலையில் வந்த சாம் பில்லிங்ஸ் அதிரடியாக 36 (24) ரன்களில் அவுட்டானார். அப்போது காப்பாற்றுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் 5 (11) பந்துகளில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

Andre Russell Mosin Khanjpeg

அதனால் தோல்வி உறுதி என அனைவரும் நினைத்த வேளையில் கடைசி நேரத்தில் ரிங்கு சிங் – சுனில் நரேன் ஆகியோர் ஜோடி போட்டி சிக்ஸர்களை பறக்க விட்டதால் போட்டியில் த்டீர் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட போது மார்கஸ் ஸ்டோனிஸ் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட இளம் இந்திய வீரர் ரின்கு சிங் 4, 6, 6, 2 என 18 ரன்கள் குவித்து 5-வது பந்தில் துரதிஸ்டவசமாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட போது களமிறங்கிய உமேஷ் யாதவை கிளீன் போல்டு செய்த மார்க்கஸ் ஸ்டோனிஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். மொத்தத்தில் கடைசி பந்து வரை ரசிகர்களை துள்ளி குதித்து நகத்தை கடிக்க வைத்து எகிற வைத்த இந்த போட்டியை கண்ட ரசிகர்கள் இந்த வருடத்தில் மட்டுமல்ல வரலாற்றிலேயே இது ஒரு மிகச்சிறந்த போட்டி என்று உறைந்து போய் பாராட்டி வருகின்றனர்.

ஆனாலும் கொல்கத்தாவுக்கு 2 பவுண்டரி 4 சிக்சருடன் ரிங்கு சிங் 40 (15) ரன்களும் 7 சிக்சருடன் சுனில் நரேன் 21* (7)ரன்களுடம் எடுத்த போராட்டம் வீணானது. அப்படி போராடி தோல்வியடைந்த கொல்கத்தா 14 போட்டிகளில் 7-வது தோல்வியை பதிவு செய்து ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. மறுபுறம் பேட்டிங்கில் மிரட்டி பந்துவீச்சில் கடைசியில் அசத்திய லக்னோ 14 போட்டிகளில் 9-வது வெற்றியை பதிவு செய்த 2-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

Advertisement