- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தன்னுடைய 71 சதங்கள் சாதனையை சமன் செய்து சச்சினை துரத்தும் கோலி பற்றி ரிக்கி பாண்டிங் பேசியது என்ன?

உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக ஐக்கிய அரபு நாடுகளில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இருப்பினும் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக தினந்தோறும் கடுமையான விமர்சனங்களை சந்தித்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அனைவரும் கேட்ட சதத்தை விளாசி பார்முக்கு திரும்பியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாகவும் இந்திய அணிக்கு பலமாகவும் அமைந்துள்ளது. கடந்த 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் 50+ என்ற பேட்டிங் சராசரியில் எதிரணிகளை வெளுத்து வாங்கிய அவர் 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்து தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக நிரூபித்தார்.

அதிலும் 31 வயதிலேயே 70 சதங்கள் விளாசிய அவர் எளிதாக சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் சிறந்த பேட்ஸ்மேனாகவும் 2017 முதல் 3 வகையான இந்திய அணிக்கும் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக செயல்பட்டதால் ஏற்பட்ட பணிச்சுமை அவருடைய பிரம்மாண்ட கேரியரில் 1020 நாட்கள் சதமடிக்க விடாமல் மெகா வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அதிலிருந்து விடுபடுவதற்காக கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்து விளையாடத் துவங்கிய அவர் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது உட்பட எதிர்பார்த்ததை விட சுமாராக செயல்பட்டதால் பொறுமையிழந்த நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் அணியிலிருந்து நீக்குமாறு விமர்சித்தனர்.

- Advertisement -

பாண்டிங்கின் 71 சதங்கள்:
ஆனாலும் இடையிடையே 50, 70 போன்ற நல்ல ரன்களை எடுத்து 2019க்குப்பின் அதிக ரன்கள் அடித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் ஒருவராக ஜொலித்த அவருடைய அருமையை உணர்ந்த நிறைய வெளிநாட்டவர்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவை கொடுத்தனர். அவை அனைத்திற்கும் மத்தியில் சுமார் ஒரு மாதம் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய ஆசிய கோப்பையில் ஆரம்ப முதலே அசத்தலாக செயல்பட்ட விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து 3 வருடங்களாக வராமல் அடம் பிடித்த 71வது சதத்தையும் விளாசினார்.

அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது பேட்ஸ்மேன் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் உலக சாதனையை சமன் செய்த அவர் விரைவில் 34 வயதை தொடுவதால் சச்சினின் 100 சதங்கள் சாதனையை உடைக்க முடியுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஆனால் இப்போதும் 30 சதங்களை அடித்து சச்சினை முந்த முடியும் என்று ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தன்னுடைய சாதனையை சமன் செய்த விராட் கோலியை பாராட்டி இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இதை 3 வருடத்திற்கு முன்பாக நீங்கள் கேட்ட போது அவரால் முடியும் என்று நான் தெரிவித்திருந்தேன். ஆனால் அந்த சாதனை பயணத்தின் வேகம் சற்று குறைந்தாலும் இப்போதும் அவரால் அந்த சாதனையை (100 சதங்கள்) உடைக்க முடியும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இன்னும் அவரிடம் நிறைய வருடங்கள் உள்ளது. ஆனால் மேற்கொண்டு 30 சதங்கள் அடிக்க வேண்டும் என்பதும் அதிகமானது. அதற்கு ஒரு வருடத்தில் 5 – 6 டெஸ்ட் சதங்கள் அடிக்க வேண்டும்”

“ஒருவேளை அவை அனைத்தும் அடுத்த 3 – 4 வருடங்களில் வரலாம். மேலும் ஒருசில ஒருநாள் போட்டிகளும் டி20 போட்டிகளும் அதற்கு கைகொடுக்கும். இருப்பினும் விராட் கோலி விஷயத்தில் நான் எதையும் சொல்லமாட்டேன். ஏனெனில் ஒருமுறை அவர் பசியுடன் ஓட ஆரம்பித்து விட்டால் எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்படுவார் என்பது உங்களுக்கு தெரியும்” என்று கூறினார்.

- Advertisement -

தற்போது பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் விளையாடுவது பற்றி பாண்டிங் மேலும் பேசியது பின்வருமாறு. “இனிமேல் தொடர்ச்சியாக விளையாடுவது அவருடைய மனதை பொறுத்தது. நீங்கள் சிறப்பாக விளையாடும் போது எந்தளவுக்கு சோர்வடைந்துள்ளீர்கள் என்பது பற்றி உங்களுக்கே தெரியாது. ஏனெனில் எப்போதும் நீங்கள் நாம் 100% உடல் மற்றும் மன அளவில் தயாராக இருக்கிறோம் என்ற எண்ணத்துடன் விளையாடுவீர்கள்.

இதையும் படிங்க : தன்மீது வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ரைக் ரேட் குற்றச்சாட்டு குறித்த விமர்சனமங்களுக்கு – ராகுல் கொடுத்த பதிலடி

அதிலிருந்து விராட் கோலி வெளிவந்து விட்டதால் இனிமேல் அவர் ரன்கள் அடித்தால் அவர் தாராளமாக அடுத்தடுத்த தொடர்களில் விளையாடலாம். அவர் சிறப்பாக விளையாடுகிறோம் என்று உணர்ந்தால் அந்த போக்கை கடைபிடித்து தொடர்ச்சியாக விளையாட வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -
Published by