ஹாஸ்பிட்டலில் அம்மா கண் விழிச்சதும் சொன்ன வார்த்தை அது தான்.. 3வது டெஸ்டில் பாதியிலேயே வெளியேறியது பற்றி அஸ்வின்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கோட் நகரில் நடைபெற்ற 3வது போட்டியிலிருந்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது நாள் இரவோடு இரவாக பாதியிலேயே வெளியேறினார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்திய வீரராக சாதனை படைத்திருந்த அவர் திடீரென்று தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட அவசரநிலை காரணமாக பாதியிலேயே வெளியேறியதாக பிசிசிஐ அறிவித்தது.

அதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மேற்கொண்டு அஸ்வின் அப்போட்டியில் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னைக்கு சென்று குடும்பத்தை பார்த்த அஸ்வின் நிலைமை சீரானதும் உடனடியாக அணிக்கு திரும்பி நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் 4வது நாளில் விளையாடி வெற்றியில் பங்காற்றினார். இந்நிலையில் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் தன்னுடைய அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாலயே அப்போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேற வேண்டிய நிலைமை வந்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -

அஸ்வின் நெகிழ்ச்சி:
ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் கண்விழித்ததும் இந்திய அணிக்காக விளையாடாமல் என்னை ஏன் பார்க்க வந்தாய்? என்று தம்மிடம் அம்மா கேட்டதாக அஸ்வின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அப்போது என்னுடைய அம்மா என்ன சொல்வார் என்பது எனக்கு தெரியும். என்னுடைய மனைவி மற்றும் அப்பா என்ன சொல்வார்கள் என்பதும் தெரியும்”

“மருத்துவமனைக்கு நான் சென்ற பின் சுய நினைவு வந்ததும் என்னுடைய அம்மா என்னிடம் “ஏன் நீ வந்தாய்?” என்று சொன்னார். அதன் பின் மீண்டும் சுயநினைவுக்கு வந்ததும் “நீ இங்கிருந்து செல்ல வேண்டும். ஏனெனில் டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது” என்று அம்மா கூறினார். அப்படி எங்களுடைய மொத்த குடும்பமும் கிரிக்கெட்டால் வடிவமைக்கப்பட்டு என்னுடைய கேரியருக்கு உதவி செய்து வருகின்றனர்”

- Advertisement -

“அது எளிதல்ல. அதனால் நிறைய மேடு பள்ளங்கள் மற்றும் உணர்ச்சிகளை எனக்கு நானே கடந்து வருகிறேன். பெரும்பாலான குடும்பங்கள் இது போலவே இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியும். ஆனால் என்னுடைய பெற்றோர்களின் வாழ்க்கை எனது கிரிக்கெட்டுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அதாவது நான் 30களின் இரண்டாவது பகுதியில் விளையாடுகிறேன். ஆனால் இப்போதும் என்னுடைய அப்பா நான் முதல் போட்டியில் விளையாடுவது போல் எனது ஆட்டத்தை பார்ப்பார்”

இதையும் படிங்க: 8 போட்டியிலேயே புதிய உச்சம்.. ரோஹித் சர்மாவை முந்தி விராட் கோலிக்கு டஃப் கொடுக்கும் ஜெய்ஸ்வால்

“அப்படி அவர்களுக்கு கிரிக்கெட் என்ன அர்த்தம் என்பதை ஒப்பிடுகையில் எனக்கு நிச்சயமாக குறைவாக இருக்கிறது” என்று கூறினார். மேலும் கூட்டுக் குடும்பமாக இருப்பதால் பலமுறை கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக தன்னுடைய குடும்பத்தை விட்டு பிரிந்து நேரங்கள் கடினமாக இருந்ததாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார். அந்த வகையில் தன்னுடைய குடும்பத்தின் ஆதரவுடன் மார்ச் 7ஆம் தேதி அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முதல் தமிழக வீரராக மாபெரும் சாதனை படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement