இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரிலும் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்க்கு வாய்ப்பு கிடைக்காதது ஒரு தரப்பு இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் கடந்த சில வருடங்களாக நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி வரும் அவர் இந்திய அணிக்காகவும் கிடைத்த வாய்ப்பில் ஓரளவு நன்றாக அசத்தியுள்ளார்.
மேலும் தோனியின் நம்பிக்கையைப் பெற்று சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள அவர் 2023 ஆஸ்திரேலிய தொடரின் ஒரு போட்டியில் சதத்தை அடித்து 123 ரன்கள் குவித்தார். ஆனால் அதன் பின் அவருக்கு இதுவரை இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் ரசிகர்கள் இந்திய அணி நிர்வாகத்தையும் பிசிசிஐயும் விமர்சித்து வருகிறார்கள்.
ருதுராஜ் வாய்ப்பு:
இந்நிலையில் இந்திய அணியில் துவக்க வீரர் இடத்திற்கு ஏற்கனவே ஜெய்ஸ்வால், சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஆகியோர் போட்டிக்கு இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். இதற்கிடையே சஞ்சு சாம்சன் திடீரென அடுத்தடுத்த சதங்களை அடித்து ஓப்பனிங் இடத்தை பிடித்துள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார். அதனாலேயே ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“இந்திய அணியின் டாப் ஆர்டர் நெருக்கமாக இருக்கிறது. அங்கே ஜெய்ஸ்வால், கில், ருதுராஜ் ஆகியோர் போட்டியில் இருக்கிறார்கள். அவர்கள் ஒருநாள் அல்லது ஏதேனும் ஒரு ஃபார்மட்டில் விளையாடுவதற்கான திட்டத்தில் இருக்கிறார்கள். தன்னுடைய கடைசி டி20 போட்டியில் மேக்ஸ்வெலை அடித்து நொறுக்கிய ருதுராஜ் சதத்தை அடித்து அசத்தினார்”
இடையே சாம்சன்:
“ஆனால் அப்போதிலிருந்து அவருக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏற்கனவே அந்த இடத்திற்கு 2 பேர் போட்டியிடுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சஞ்சு சாம்சன் 2 சதங்கள் அடித்து ஒரு இடத்தை எடுத்துக்கொண்டார். மிடில் ஆர்டரில் விளையாடி வந்த அவர் பெரிய ரன்கள் குவித்து தற்போது ஓப்பனிங் இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில் அவர் சிலபஸ்க்கு வெளியே இருந்து வந்துள்ளார்”
இதையும் படிங்க: இந்தியாவில் சுத்தமே இல்ல.. முதல் டி20 தோல்விக்கு இதுவும் காரணம்.. சென்னையில் நம்புறோம்.. ப்ரூக் பேட்டி
“அபிஷேக் ஷர்மா சுமாராக விளையாடியதால் அழுத்தம் உண்டாகி வந்தது. அவரும் தற்போது ருதுராஜ் வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்று தெரிந்து அழுத்தத்தின் கீழ் அதிரடியாக விளையாடியுள்ளார். கவலையின்றி சுதந்திரமாக விளையாடுங்கள் என்ற மெசேஜை அவர் இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து பெற்றுள்ளார்” என்று கூறினார்.