இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள நிலையில் இரண்டாவது போட்டி ஜனவரி 25ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற உள்ளது.
முன்னதாக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் சுமாராக பேட்டிங் செய்த இங்கிலாந்து 132க்கு ஆல் அவுட்டானது. அதை துரத்திய இந்தியா அதிரடியாக விளையாடி 12.5 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு வருண் சக்கரவர்த்தி மூன்று விக்கெட்டுகளும் அபிஷேக் சர்மா 79 ரன்களும் எடுத்து முக்கிய பங்காற்றினார்கள்.
சுத்தமா இல்லை:
இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியின் போது காற்று சுத்தமாக இல்லாமல் புகை மூட்டமாக இருந்ததாக இங்கிலாந்து வீரர் ஹரி ப்ரூக் தெரிவித்துள்ளார். அதனால் பந்தை சரியாக பார்த்து அடிக்க முடியாமல் போனதால் அதுவும் தோல்விக்கு ஒரு காரணம் என்று அவர் அதிருப்தியை தெரிவித்துள்ளார். எனவே சென்னையில் ஆவது தெளிவான காற்று இருக்கும் என்று நம்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“வருண் சக்கரவர்த்தி மிகவும் நல்ல பவுலர். ஆனால் அன்றைய நாள் இரவில் புகை அதிகமாக இருந்தது. அதனால் பந்தை பார்த்து அடிப்பது கடினமாக இருந்தது. எனவே சென்னையில் காற்று தெளிவாக இருக்கும் என்று நம்புகிறோம். அப்போது தான் எங்களால் பந்தை இன்னும் கொஞ்சம் எளிதாக பார்த்து அடிக்க முடியும். டி20 கிரிக்கெட்டில் சுழல் பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினமானது”
சுழலில் தடுமாற்றம்:
“குறிப்பாக நான் அதிரடியாக விளையாட முயற்சிப்பதால் அவுட்டாகிறேன். அதே சமயம் அந்த பந்துகளை சமாளிக்க என்னிடம் வழி இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் மிடில் ஆர்டரில் வருவதால் பெரும்பாலும் சுழல் பந்துகளையே ஆரம்பத்தில் எதிர்கொள்வேன். அதனாலேயே ஸ்பின்னர்களுக்கு எதிராக என்னுடைய புள்ளிவிவரங்கள் நன்றாக இல்லாமல் இருக்கலாம்”
இதையும் படிங்க: 55க்கு அவுட்.. துணை கேப்டனா போட்டு சிக்கிய பிசிசிஐ? சொதப்பல் கில் தலைமையிலான பஞ்சாப்பை நொறுக்கும் கர்நாடகா
“ஆனால் விளையாட்டில் விமர்சனங்கள் வருவது சகஜம். இந்த தொடருக்கு நீங்கள் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக எங்களுடைய பயிற்சியாளர் மெக்கல்லம் முதல் நாள் இரவுக்கு முன்பாக மட்டுமே சொன்னார். அதைக் கேட்டு புன்னகையுடன் நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன்” என்று கூறினார். இருப்பினும் இந்தியாவில் தற்போது பனி காலம் என்பதால் பகல் நேரத்திலேயே சில இடங்களில் தெளிவாக பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.