2024 டி20 உ.கோ டிக்கெட் கம்மியா இருக்குன்னு தெரிஞ்சே அடிக்கிறாரு.. இளம் வீரரை பாராட்டிய ஓஜா

Pragyan Ojha
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகுவதற்காக நடைபெறும் இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. அதனால் 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரின் கோப்பையை இந்தியா வென்று அசத்தியுள்ளது.

2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிவதற்காக நடைபெறும் இந்த தொடரில் சிவம் துபே, ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்டு வருகின்றனர். அதில் முதல் போட்டியில் காயத்தால் விலகிய யசஸ்வி ஜெய்ஸ்வால் 2வது போட்டியில் அணிக்கு திரும்பி 173 ரன்களை சேசிங் செய்கையில் 68 (34) ரன்கள் விளாசி இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.

- Advertisement -

கம்மியான இடம்:
2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியா ஃபைனல் செல்வதற்கு உதவிய அவர் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்தி வந்தார். குறிப்பாக கடந்த ஐபிஎல் தொடரில் 625 ரன்கள் குவித்து அதிவேகமாக அரை சதமடித்ததால் சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் நாக் அவுட்டில் சதமடித்து தங்கப்பதக்கம் வெல்ல உதவினார்.

அப்படி டி20 கிரிக்கெட்டில் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கும் சுப்மன் கில்லை விட அசத்தும் ஜெய்ஸ்வால் கேப்டன் ரோஹித்துடன் களமிறங்கினால் இந்தியாவுக்கு இடது – வலது கை ஓபனிங் ஜோடி கிடைக்கும். எனவே 2024 டி20 உலகக் கோப்பையில் ஜெய்ஸ்வால் தேர்வாவதற்கு பிரகாச வாய்ப்புகள் உள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் உலகக்கோப்பை அணியில் குறைவான இடம் மட்டுமே இருக்கிறது என்பதை தெரிந்து ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதாக முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா ரோஜா பாராட்டியுள்ளார்.

- Advertisement -

எனவே இதே போல விளையாடினால் கண்டிப்பாக உலகக் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கும் ஓஜா இது பற்றி கலர்ஸ் சினிபிளக்ஸ் சேனலில் பேசியது பின்வருமாறு. “அவர் பேட்டிங் செய்த விதமும் வேகமாக விளையாடிய விதமும் தன்னம்பிக்கையை காட்டிய விதமும் சிறப்பாக இருந்தது. அவர் முதிர்ச்சியாக விளையாடுவதுடன் தனது அதிரடியாக விளையாடும் திறமையை காண்பித்துள்ளார்”

இதையும் படிங்க: இப்படியே ஆடுனா அவரே வந்தாலும் உங்களுக்கு டி20 உ.கோ சான்ஸ் கிடைக்கும்.. இளம் வீரருக்கு கவாஸ்கர் ஊக்கம்

“அவர் தன்னுடைய ஆட்டத்தை விட்டுச் செல்லாமல் முன்னோக்கி எடுத்துச் செல்கிறார். இப்போட்டியில் அவர் அணி எடுத்த ரன்களில் அதிக ரன்களை குவித்துள்ளார். அது அவருடைய பசியை காண்பிக்கிறது. உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு சில டிக்கெட்டுகள் மட்டுமே இருக்கிறது என்பது அவருக்கு தெரியும். ஒருவேளை நீங்கள் அந்த இடத்தை பிடிக்க விரும்பினால் இதே போல அதிரடியாக விளையாடி போட்டியை ஃபினிஷிங் செய்வது முக்கியமாகும்” என்று கூறினார்.

Advertisement