2021 உலககோப்பை மாதிரி ஆசிய கோப்பையிலும் இந்தியாவை தோற்கடிப்போம் – முன்னாள் பாக் வீரர் உறுதி

INDvsPAK
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் ஐசிசி டி20 உலக கோப்பை 2022 தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு உலகின் அனைத்து அணிகளும் பல்வேறு  இருதரப்பு டி20 தொடர்களில் பங்கேற்று வருகின்றன. அந்த வரிசையில் கடந்த முறை விராட் கோலி தலைமையில் நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐபிஎல் 2022 தொடருக்கு பின் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடி வருகிறது.

அந்த வரிசையில் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்துவிட்டு அடுத்ததாக ஜிம்பாப்வேக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையின் இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா அதைத்தொடர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பையில் களமிறங்க உள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட அனைத்து முதன்மை வீரர்களும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் அந்த தொடர் வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது.

- Advertisement -

இந்தியா – பாகிஸ்தான்:
அந்த தொடரில் பங்கேற்கும் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகளும் குரூப் ஏ மற்றும் பி ஆகிய இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்முறை டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த தொடர் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. அதற்கான முழு அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன. கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் கடைசியாக கடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் இதே துபாய் மைதானத்தில் மோதிய போது அற்புதமான செயல்பட்ட பாகிஸ்தான் உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்து வரலாறு படைத்தது.

INDvsPAK

அதனால் பெரிய அவமானத்தை சந்தித்த இந்தியா இம்முறை அதற்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும் வரலாற்றில் 7 ஆசிய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஆசிய அணியாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2018இல் இதே துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வென்றது.

- Advertisement -

பாகிஸ்தான் வெல்லும்:
அதனால் இந்த முறையும் பாகிஸ்தான் உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2021 டி20 உலக கோப்பையில் தவறுகளைச் செய்த இந்தியாவை தோற்கடித்தது போல் இம்முறையும் தேவையற்ற கேப்டன்ஷிப் மாற்றம், அணிகள் நிகழும் தேவையற்ற வீரர்கள் மாற்றம் போன்ற குளறுபடிகளை பயன்படுத்தி பாகிஸ்தான் மீண்டும் வெற்றி பெறும் என்று அந்நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர் ரசித் லதீப் உறுதியாக தெரிவித்துள்ளார்.

latif

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “வெற்றி அல்லது தோல்வி என்பது வேறு விஷயம். ஆனால் பாகிஸ்தானின் வியூகம் சிறப்பானதாக தோன்றுகிறது. டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20 என எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் சமீபத்தில் பாகிஸ்தான் அணியில் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் நிகழ்த்தப்படுவதில்லை. ஆனால் இந்தியாவை நீங்கள் பார்க்கும் போது இந்த வருடம் 7 மாதங்களில் 7 கேப்டன்கள் என்ற நிலைமை சீரற்ற சூழ்நிலையை காட்டுகிறது”

- Advertisement -

“இந்திய அணியில் விராட் கோலி இல்லை. ரோகித் சர்மா மற்றும் ராகுல் காயமடைகின்றனர். ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் போன்றவர்கள் கேப்டன்களாக செயல்படுகின்றனர். ஷிகர் தவான் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்படுகிறார். அந்த வகையில் அவர்கள் சிறந்த அணியை கட்டமைப்பதற்கே தடுமாறுகிறார்கள். இந்திய அணியில் தரமான வீரர்கள் உள்ளார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதை வைத்து அவர்களால் உறுதியான சிறந்த 16 பேர் கொண்ட அணியை உருவாக்க முடியவில்லை”

இதையும் படிங்க : நல்ல பார்மில் இருந்த போதும் கட்டாயத்தால் ஓய்வு பெற்ற 5 இந்திய வீரர்களின் பட்டியல் – லிஸ்ட் இதோ

“அதனால் அவர்களுக்கு சிறந்த 11 பேர் கொண்ட அணியில் உருவாக்குவதிலும் பிரச்சனை ஏற்படும். கடந்த வருடம் இதுபோன்ற தவறுகளை அவர்கள் செய்ததாலேயே பாகிஸ்தான் வென்றது. எனவே இம்முறையும் அதே தவறை செய்யும் இந்தியாவின் குறையை பயன்படுத்தி பாகிஸ்தான் மீண்டும் வெல்லும் என்று நினைக்கிறேன்” என்று கூறினார். இருப்பினும் முதல் தரமான வீரர்கள் இல்லாத நிலைமையிலேயே சமீபத்திய தொடர்களில் இந்தியா வென்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement