இனிமேல் அவங்க கோப்பை வெல்வதை தடுக்க யாராலும் முடியாது – இன்சமாம்-உல்-ஹக் அதிரடி கருத்து

Inzamam
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2009க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே பரம எதிரி இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்தது. அதனால் கிண்டல்களுக்கு உள்ளான அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பும் கேள்விக்குறியான நிலையில் கடைசி நேரத்தில் யாருமே எதிர்பாராத வகையில் நெதர்லாந்திடம் தோற்று தென்னாப்பிரிக்கா வெளியேறியது.

Babar Azam Moahmmed Rizwan Pak vs NZ

அந்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி கடைசி 3 போட்டிகளில் வென்று அரை இறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற வலுவான நியூசிலாந்துக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அசால்ட்டாக வென்றது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்தை ஆரம்பம் முதலே கச்சிதமாக பந்து வீசி அதிரடி காட்ட விடாமல் மடக்கி பிடித்த பாகிஸ்தான் ஃபீல்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டு குறைந்தது 20 – 30 ரன்களை சேமித்தது.

- Advertisement -

அதை விட நியூசிலாந்து நிர்ணயித்த 153 ரன்களை துரத்தும் போது சுமாரான பார்மில் தவிக்கும் நம்பிக்கை நட்சத்திரங்கள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் 105 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அப்படி அழுத்தமான முக்கிய போட்டியில் 3 துறைகளிலும் அபாரமாக செயல்பட்டு ஃபைனலுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் முக்கிய நேரத்தில் முழுமையான பார்வுக்கு திரும்பியுள்ளதால் அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Pak Players Team Fans

யாராலும் தடுக்க முடியாது:

அதனால் 1992இல் இதே ஆஸ்திரேலிய மண்ணில் இதே போல் ஆரம்பத்தில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தாலும் அதற்காக துவளாமல் இம்ரான் கான் தலைமையில் மீண்டெழுந்து கோப்பையை வென்றது போல் இம்முறை பாபர அசாம் தலைமையில் பாகிஸ்தான் நிச்சயமாக கோப்பையை முத்தமிடும் என்று அந்நாட்டவர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்நிலையில் முக்கிய நேரத்தில் கிடைத்த அதிர்ஷ்டத்துடன் முழுமையான பார்முக்கு திரும்பி ஃபைனலுக்கு முன்னேறியுள்ள பாகிஸ்தானை கோப்பையை வெல்வதிலிருந்து இனி யாரும் தடுக்க முடியாது என்று முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் வெளிப்படையாக பேசியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் பாகிஸ்தான் தடுத்து நிறுத்த முடியாத அணியாக மாறியுள்ளது. அவர்களது பவுலிங் இந்த தொடரின் ஆரம்ப முதலே அபாரமாக இருந்து வருகிறது. மேலும் சுமாரான ஃபார்மில் இருந்த மிடில் ஆர்டர் இந்த உலக கோப்பையில் அசத்திய நிலையில் டாப் ஆர்டர் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் அதுவும் அரையிறுதியில் அபாரமாக செயல்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்தும் எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. அதனால் இப்போதிலிருந்து பாகிஸ்தான் கோப்பையை வெல்வதை யாரும் தடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை”

Inzamam

“ஒரு பேட்ஸ்மேனாக இந்த தொடரின் ஆரம்பத்தில் பாபர் அசாம் சிறப்பாக செயல்படாமல் போயிருக்கலாம். ஆனால் ஒரு தலைவராக கடினமான நேரங்களில் அவர் அணியை சரியாக வழி நடத்தியதற்கு பாராட்டுக்கள். அது போன்றவற்றை புள்ளி விவரங்கள் சொல்லாது. அது மிகவும் முக்கியமாகும். மேலும் பாகிஸ்தான் வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறாத நிலையிலும் சிறப்பான உணர்வுகளை வெளிப்படுத்தினர். இதற்கான பாராட்டுக்கள் சக்லைன் முஸ்டக், முகமது யூசுப் மற்றும் மேத்யூ ஹெய்டன் ஆகிய பயிற்சியாளர்களை சேரும்”

“அத்துடன் இந்த வெற்றியை நிறைய பேர் 1992 உலக கோப்பையுடன் ஒப்பிடுகிறார்கள். அப்போது போலவே இம்முறையும் அரை இறுதியில் நியூசிலாந்தை பாகிஸ்தான் தோற்கடித்துள்ளது. அந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்தை பாகிஸ்தான் ஃபைனலில் எதிர்கொண்டது. அது இம்முறையும் நடக்கலாம். ஆனால் ஃபைனலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவது கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய போட்டியாக இருக்கும்” என்று கூறினார்.

அதாவது ஆரம்பத்தில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தினாலும் கடைசி நேரத்தில் அதிர்ஷ்டமும் அனைத்து வீரர்களும் ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் பாகிஸ்தான் கோப்பையை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். அதே போல் இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு பதில் இந்தியா விளையாடினால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement