ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா 10 வருடம் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை நழுவ விட்டது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கும் இந்தியா தகுதி பெறாமல் வெளியேறியது. அந்த தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய மூத்த விரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது.
அதே சமயம் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக விளையாடிய ஜெய்ஸ்வால் சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றிக்கு போராடினார். அவரை விட முதல் போட்டியில் அறிமுகமான நித்திஷ் ரெட்டி 42, 38* ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதற்கடுத்த போட்டிகளிலும் 40, 30 போன்ற ரன்கள் குவித்த அவர் 4வது போட்டியில் சதத்தை அடித்து 114 ரன்கள் குவித்தார்.
திறமையான வீரர்:
அதனால் இந்தியாவை குறைந்தபட்சம் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றிய அவர் மொத்தமாக 294 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார். இந்நிலையில் நித்திஸ் ரெட்டி இந்திய டெஸ்ட் அணியில் நீண்ட காலம் 6வது இடத்தில் விளையாடுவதற்கான திறமையை கொண்டுள்ளதாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அணியில் நீண்ட காலமாக நிலவும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இல்லாத பிரச்சனையையும் அவர் தீர்ப்பார் என்று பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “உங்களுக்கு நல்ல வாய்ப்பை போன்ற ஒரு வீரர் கிடைத்துள்ளார். எந்த பேட்ஸ்மேனுக்கும் ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுகமாகி விளையாடுவது அவ்வளவு சுலபமாக இருக்காது”
ஆல் ரவுண்டர் நிதிஷ்:
“நாம் அவருடைய சதத்தை காண்பிப்போம். ஆனால் அதற்கு முன்பாகவும் நன்றாக பேட்டிங் செய்த அவர் தொடர்ச்சியாக 40 ரன்கள் எடுத்தார். இருப்பினும் சதத்தை அடித்த பின் அவர் 7, 8வது இடத்திற்கு பதிலாக ஆறாவது இடத்தில் விளையாட வேண்டும் என்று நாம் தற்போது பேசுகிறோம். என்னைக் கேட்டால் அவர் ஆறாவது இடத்தில் தொடர்ச்சியாக விளையாடும் திறன் உடையவர் என்று கருதுகிறேன்”
இதையும் படிங்க: வலுவா கம்பேக் கொடுப்போம்.. தம்பி சூப்பர்ஸ்டார் ஜெய்ஸ்வால் பதிவுக்கு கவாஜா, மைக்கேல் வாகன் வாழ்த்து
“அந்த வகையில் இந்தியாவுக்கு ஒரு சிறந்த வீரர் கிடைத்துள்ளார். அவர் பெரிய பிரச்சனையை தீர்க்கக் கூடியவர்” எனக் கூறினார். முன்னதாக ஹர்திக் பாண்டியா இடத்தை இந்திய டெஸ்ட் அணியில் நித்திஷ் ரெட்டி வருங்காலத்தில் நிரப்புவார் என்று சுனில் கவாஸ்கரும் சமீபத்தில் பாராட்டியிருந்தார். எனவே பந்து வீச்சில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் செய்தால் நித்திஷ் ரெட்டி இந்தியாவுக்கு பயனுள்ள ஆல் ரவுண்டராக உருவெடுப்பார் என்றே சொல்லலாம்.