உலகக் கோப்பைத் தொடரின் 39வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அவிஷ்கா பெர்னாண்டோ 104 ரன்கள் எடுத்தார். குஷால் பெரரா 64 ரன்கள் எடுத்தார்.
அதன் பிறகு 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 315 ரன்கள் குவித்தது. இதனால் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பாக மலிங்கா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக நிக்கோலஸ் பூரான் 118 ரன்கள் குவித்தார்.
இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது அந்த அணி எளிதில் தோற்று விடும் என்று நினைத்து நிலையில் பூரான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மேலும் ஒரு கட்டத்தில் வெற்றிக்கு 32 பந்துகளில் 51 ரன்கள் தேவை என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் அப்போது எதிர்பாராதவிதமாக பூரான் அவுட்டாகி வெளியேறிய பிறகு அந்த அணியால் வெற்றி இலக்கினை அடைய முடியவில்லை. அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி அந்த அணிக்கு ஆறாவது தோல்வியாகும். இலங்கை அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும் இருப்பினும் இந்த இரண்டு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை தவற விட்டது குறிப்பிடத்தக்கது.