புனேவிலும் சென்னை அணி விளையாட எதிர்ப்பு…மகாராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத்துக்கு நீதிமன்றம் புதிய கேள்வி – காரணம் இதுதான் ?

pune
- Advertisement -

மக்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், கிரிக்கெட் போட்டி நடத்த எப்படி தண்ணீர் ஏற்பாடு செய்வீர்கள் என மகாராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத்துக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராகச் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி விளையாடிய போட்டியின்போது பல்வேறு தரப்பினரும் சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் கைதாகினர்.

இதில், போலீஸாரைத் தாக்கியதாகச் சீமான் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் ஐ.பி.எல் போட்டிகளுக்கு உரிய பாதுகாப்புக் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகத் தமிழக அரசு தரப்பில் பி.சி.சி.ஐ-யிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த போட்டிகள் புனே மைதானத்தில் நடைபெறும் என்று ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்தது.
chennai

இந்தநிலையில், தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் புனேவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், `மக்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில், புனே மைதானத்தைப் பராமரிக்கப் போதுமான தண்ணீர் இருக்கிறதா. அதற்குத் தேவையான தண்ணீரை எப்படி ஏற்பாடு செய்வீர்கள்’ என மகாராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கத்துக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.

- Advertisement -
Advertisement