முதல் கப் ஜெயிக்க ஆர்சிபி’க்கு வாங்க.. ரசிகர் அழைப்புக்கு தோனி கொடுத்த பதிலால் சிஎஸ்கே ரசிகர்கள் நெகிழ்ச்சி

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதில் தங்களுக்கு தேவையான சில நட்சத்திர வெளிநாட்டு வீரர்களை வாங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இம்முறையாவது பஃப் டு பிளேஸிஸ் தலைமையில் தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை வென்று எதிரணி ரசிகர்களின் கிண்டல்களுக்கு பதிலடி கொடுக்குமா எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் கோப்பையை வெல்ல முடியாத அந்த அணிக்கு விராட் கோலி 213 – 2021 வரை கேப்டனாக செயல்பட்டும் வெற்றி காண முடியவில்லை. இத்தனைக்கும் டீ வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் போன்ற நட்சத்திர வீரர்களை கொண்டிருந்தும் முக்கிய நேரங்களில் சொதப்புவதை வழக்கமாக வைத்துள்ள பெங்களூரு கோப்பையை எதிரணிகளுக்கு தாரை வார்த்து வருகிறது.

- Advertisement -

தோனியின் பதில்:
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நாயகன் எம்எஸ் தோனி கலந்து கொண்டார். அதில் ஒரு பெங்களூரு ரசிகர் நேரடியாக சிரித்த முகத்துடன் எங்களுடைய அணிக்கு கேப்டனாக முதல் கோப்பையை வென்று கொடுக்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்தது பின்வருமாறு.

“கடந்த 16 வருடங்களாக நான் ஆர்சிபி அணியின் ரசிகனாக இருந்து வருகிறேன். சிஎஸ்கே அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்தது போல் நீங்கள் எங்களுடைய எங்களுடைய அணிக்கு வந்து ஆதரவு கொடுத்து ஒரு கோப்பையை வென்று கொடுப்பதை நான் விரும்புகிறேன்” என்று சொன்ன போது அரங்கமே ஆரவாரம் செய்தது. மறுபுறம் அந்த சங்கடமான கேள்விக்கு தல தோனி கூலாக பதிலளித்தது பின்வருமாறு.

- Advertisement -

“பெங்களூரு நல்ல அணி என்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் கிரிக்கெட்டில் அனைத்தும் உங்களுடைய திட்டங்களுக்கு தகுந்தார் போல் செல்லாது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். ஐபிஎல் தொடரை பற்றி நாம் பேசும் போது அதில் விளையாடும் 10 அணிகளும் தரமான வீரர்களைக் கொண்ட வலுவான அணிகளாகவே களமிறங்குகின்றன. இருப்பினும் முக்கிய நேரங்களில் சில வீரர்கள் காயத்தால் வெளியேறுவது போன்றவற்றால் தான் பிரச்சனை ஏற்படும்”

“எனவே பெங்களூரு நல்ல அணியாக இருக்கிறார்கள். ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல அனைவருக்கும் நியாயமான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நான் என்னுடைய அணியை பற்றி கவலைப்படுவதற்கே நிறைய அம்சங்கள் இருக்கிறது. அதனால் மற்ற அணிகளுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அதை தவிர்த்து நான் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் நான் சென்னை அணியிலிருந்து வெளியேறி உங்களுக்கு ஆதரவு அல்லது உதவி செய்தால் எங்களுடைய ரசிகர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள்” என சொன்னது சிஎஸ்கே ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement