உழைப்பின் நாயகனாக ஜொலிக்கும் சிராஜ்.. ஆசிய கோப்பையில் ஆடிய ருத்ரதாண்டவத்தால் – ஐசிசி தரவரிசையில் புதிய சாதனை

Mohammed Siraj 5
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்தியா ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்து தாயகம் திரும்பியது. குறிப்பாக சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானை பந்தாடி நடப்பு சாம்பியன் இலங்கையை அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 8வது முறையாக ஆசிய கோப்பை முத்தமிட்டது.

முன்னதாக கொழும்புவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கையை தன்னுடைய மிரட்டலான பந்து வீச்சால் விட்ட முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை சாய்த்து வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாக முக்கிய பங்காற்றினார். அதிலும் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை சாய்த்த அவர் சர்வதேச அரங்கில் ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற மாபெரும் வரலாறு படைத்தார்.

- Advertisement -

உழைப்பின் நாயகன்:
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிவேகமாக 5 விக்கெட்களை (16 பந்துகளில்) எடுத்த பவுலர் என்ற உலக சாதனை படைத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதற்காக கிடைத்த ஆட்டநாயகன் விருதையும் மைதான பராமரிப்பாளர்களுக்கு பரிசாக கொடுத்து ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார். இந்நிலையில் ஆசிய கோப்பை முடிந்த கையோடு ஒருநாள் போட்டிகளுக்கான பவுலர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதில் மாபெரும் ஃபைனலில் தெறிக்க விடும் பவுலிங்கை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 694 புள்ளிகள் பெற்று உலகின் புதிய நம்பர் பந்து வீச்சாளராக முன்னேறி சாதனை படைத்த இந்தியாவுக்கு மற்றுமொரு பெருமையை சேர்த்துள்ளார். குறிப்பாக கடந்த வாரம் வரை 9வது இடத்தில் இருந்த அவர் ஃபைனலில் 15 பந்துகளில் 5 விக்கெட்டுகளை எடுத்ததால் இருமடங்கு கூடுதல் புள்ளிகளை பெற்று நேரடியாக ஜோஸ் ஹேசல்வுட், ட்ரெண்ட் போல்ட் போன்றவர்களை மிஞ்சி நம்பர் ஒன் இடத்தை முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகனாக பிறந்து அடிமட்டதிலிருந்து போராடி வந்த அவர் ஆரம்ப காலங்களில் ரன்களை வாரி வழங்கி கிண்டல்களுக்கு உள்ளானார். குறிப்பாக தந்தையை போல ஆட்டோ ஓட்டு செல்லுங்கள் என்று கிண்டலடிக்கப்பட்ட அவர் மனம் தளராமல் அப்போதைய கேப்டன் விராட் கோலியின் ஆதரவுடன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கடந்த பிப்ரவரி மாதமே உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.

இதையும் படிங்க: சச்சின் மாதிரியே விராட் கோலி அதை செய்ய விரும்ப மாட்டாரு.. ஆனா சச்சினின் அந்த சாதனை உடைப்பது ரொம்ப கஷ்டம்.. மஞ்ரேக்கர் பேட்டி

இருப்பினும் அதன் பின் நிறைய போட்டிகளில் விளையாடாததால் பின்தங்கிய அவர் தற்போது மீண்டும் நம்பர் ஒன் இடத்தை தனதாக்கி உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு அடையாளமாக ஜொலிக்கிறார். 2023 உலகக் கோப்பைக்கு முன்பாக நம்பர் ஒன் இடத்தை பிடித்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ள அவரை தொடர்ந்து குல்தீப் யாதவ் டாப் 10 பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement