டெஸ்ட் தொடரில் இந்தியா – தெ.ஆ பவுலர்கள் காயத்தால் விலகல்? வெளியான தகவல்.. இரு அணிக்கும் மெகா பின்னடைவு

IND vs RSA Test
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது. அதை காட்டிலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக இவ்விரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது தான் அனைவரிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக வரலாற்றில் எத்தனையே மகத்தான கேப்டன்கள் தலைமையில் ஜாம்பவான் வீரர்கள் களமிறங்கியும் தென்னாப்பிரிக்க மண்ணில் மட்டும் இதுவரை இந்தியா ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. எனவே இம்முறை ரோகித் சர்மா தலைமையில் அந்த மோசமான வரலாற்றை மாற்றுவதற்காக இந்திய அணியினர் போராட உள்ளனர்.

- Advertisement -

இரு அணிக்கும் பின்னடைவு:
இந்நிலையில் இந்த முக்கியமான டெஸ்ட் தொடரிலிருந்து இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்தால் விலக உள்ளதாக கிரிக்பஸ் இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. சொல்லப்போனால் 2023 உலகக் கோப்பையில் கணுக்காலில் சந்தித்திருந்த லேசான காயத்தையும் பொருட்படுத்தாமல் அபாரமாக விளையாடிய அவர் 24 விக்கெட்டுகளை எடுத்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அதனால் ஷமி காயத்தை பொருத்தே விளையாடுவார் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு இத்தொடருக்கான இந்திய அணியை வெளியிடப்பட்ட போதே பிசிசிஐ அறிவித்திருந்தது. ஆனால் இன்னும் அந்த காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால் இந்த டெஸ்ட் தொடரில் ஷமி விலகுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. அதனால் டிசம்பர் 15ஆம் தேதி தென்னாபிரிக்காவுக்கு செல்லவிருக்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் ஷமி பயணிக்க மாட்டார் என்பதும் தெரிய வருகிறது.

- Advertisement -

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிய வருகிறது. ஒருவேளை தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் ஷமி காயத்தால் வெளியேறினால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதை ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இதையும் படிங்க: கொல்கத்தா அணியின் கேப்டனாக மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம். மறைமுகமாக குத்திக்காட்டி கம்பீர் போட்ட பதிவு

இது ஒருபுறம் இருக்க தென்னாபிரிக்காவை சேர்ந்த நட்சத்திரம் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் காகிஸோ ரபாடாவும் குதிகாலில் சந்தித்த காயத்தால் இத்தொடரிலிருந்து விலக உள்ளதாக அந்நாட்டிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக காயத்தால் நடைபெற்று வரும் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் தேர்வு செய்யப்படாத அவர் தற்போது டெஸ்ட் தொடரிலும் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் 2 முக்கிய பவுலர்கள் காயத்தால் விலகுவது இந்த தொடரில் இரு அணிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுத்தும் என்றால் மிகையாகாது.

Advertisement