இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டனாக ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இத்தனைக்கும் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித் சர்மா 2027 உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்படுவார் என்று நம்பப்பட்டது. ஆனால் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியுமா? என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டுள்ளது.
இதன் காரணமாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளது. இனிமேல் அவர்கள் உலகக்கோப்பையில் விளையாட வேண்டுமெனில் தொடர்ச்சியாக அரை சதம், சதம் போன்ற பெரிய ரன்கள் குவிப்பது அவசியமாகிறது. இந்நிலையில் ரோஹித் சர்மா தம்முடைய சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் சுயநலமின்றி அடித்து நொறுக்குவார் என்று முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.
கழற்றி விடாதீங்க:
அந்த அணுகுமுறையைப் பின்பற்றி விளையாடும் ரோஹித் பெரும்பாலும் 30, 40 ரன்கள் மட்டுமே அடிப்பார் என்று கைஃப் தெரிவித்துள்ளார். எனவே அதைக் காரணமாக வைத்து கழற்றி விடாமல் 2027 உலகக்கோப்பையில் விராட், ரோஹித்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலி மதிப்பிடப்படுவார் என்று மக்கள் சொல்கின்றனர்”
“அது ரோஹித் சர்மாவுக்கும் பொருந்தும் என்று நான் கருதுகிறேன். கேப்டனாக இருந்த போது அவர் 20, 30, 40 ரன்களை எடுப்பார். ஆனால் முக்கியமான பெரிய போட்டிகளில் அவர் 80 ரன்கள் அடிப்பார். இப்படித்தான் அவருடைய கேரியர் முழுக்க இருந்தது. அவர் சீராக பெரிய ரன்கள் அடித்ததில்லை. விராட் கோலி தொடர்ச்சியாக பெரிய ரன்கள் அடிக்கக்கூடியவர்”
ஃகைப் கோரிக்கை:
“ஆனால் ரோஹித் சர்மா மேட்ச் வின்னிங் ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். அதுவே அவர்களுக்கிடையே இருக்கும் வித்தியாசமாகும். எனவே அவர்களை மதிப்பிடுவது தேர்வாளர்களுக்கு கடினமாக இருக்கும். ஒருவேளை ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் தடுமாறினால் அனைவரும் அவர் ஃபார்ம் அவுட்டாக்கி விட்டார் என்று சொல்வார்கள். இருப்பினும் அவருடைய கேரியரை நீங்கள் பார்த்தால் ஓரிரு போட்டிகளில் தடுமாறக்கூடிய அவர் பின்னர் பெரிய ரன்கள் அடித்து கம்பேக் கொடுப்பார்”
இதையும் படிங்க: ஐசிசி மகளிர் உ.கோ: 76/7 டூ 221/9.. பாகிஸ்தானை நொறுக்கிய லேடி மேக்ஸ்வெல்.. ஆஸி 17க்கு 17 மாஸ் வெற்றி
“கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் கூட லீக் சுற்றில் 30, 40 ரன்கள் அடித்த அவர் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றார். எனவே உலகக் கோப்பையில் உங்களுக்கு அனுபவமிக்க வீரர்கள் தேவை. ஒருவேளை நன்றாக நடத்தப்படவில்லை என்று கருதினால் அவர்கள் ஓய்வு பெறுவார்கள். உலகக்கோப்பையில் அவர்கள் விளையாடினால் இந்தியாவின் பெருமை உயரும். அவர்களிடம் மேட்ச் வின்னிங் கண்டிப்பாக வரும். எனவே அவர்களை ஓரிரு போட்டிகளில் மதிப்பிடாதீர்கள் என்பதே என்னுடைய கோரிக்கையாகும்” என்று கூறினார்.



