நாக்பூர் நமக்கும் ராசி தான், அதை மட்டும் செஞ்சா ஈஸியா ஜெயிக்கலாம் – இந்தியாவை சாய்க்க மிட்சேல் ஜான்சன் ஆலோசனை

Johnson
- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் நாக்பூரில் கோலாகலமாக துவங்குகிறது. உலகின் டாப் 2 அணிகளான இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தும் இத்தொடரில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஏராளமான உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் நேருக்கு நேர் மோதுவதால் உலகம் முழுவதிலும் இத்தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.

அத்துடன் 2004க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடைபோடும் இந்தியா அதே வேகத்துடன் இம்முறையும் வென்று பைனலுக்கு தகுதி பெறும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். மறுபுறம் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட காரணத்தால் 2018/2019, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் வரலாற்றில் முதல் முறையாக அவமான தோல்விகளை பரிசளித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்த்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்கும் வெறியுடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

- Advertisement -

ஜான்சன் ஆலோசனை:
அதற்காக அஷ்வின் போன்ற சவாலை கொடுக்கும் இந்திய பவுலர்களை சிறப்பாக எதிர்கொள்ள மகேஷ் பிதியா எனும் லோக்கல் ஸ்பின்னரை தேடிப் பிடித்து ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் பெங்களூருவில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மறுபுறம் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதற்காக முதல் போட்டி நடைபெறும் நாக்பூரில் இந்திய வீரர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நாக்பூர் மைதானத்தில் கடைசியாக கடந்த 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட போது 172 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இருப்பினும் அப்போட்டியில் இந்திய ஸ்பின்னர்களுக்கு நிகராக ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஜேசன் க்ரேஜா 12 விக்கெட்களை எடுத்து இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுத்தார். அதே போல இம்முறை நாக்பூரில் நடைபெறும் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் எப்படியாவது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுத்து விட்டால் எஞ்சிய வெற்றியை நேதன் லயன் தன்னுடைய அனுபவத்தால் வசமாக்கி விடுவார் என்று முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் கூறியுள்ளார். இது பற்றி வெஸ்ட் ஆஸ்திரேலியா பத்திரிகையில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நியாயமான முறையில் சுழல் பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒரு சில முறை ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை குவித்தால் அது இந்தியா மீது ஆரம்பத்திலேயே அழுத்தத்தை திருப்பிப் போடும். இத்தொடருக்காக ஆஸ்திரேலியர்கள் 4 ஸ்பின்னர்களை அழைத்துச் சென்றுள்ளார்கள். அதில் நேதன் லயனுடைய தரத்தையும் அனுபவத்தையும் சாதனைகளையும் இந்தியர்கள் நிச்சயமாக மதிப்பார்கள். இருப்பினும் இதர ஸ்பின்னர்களை அடிக்க பயப்பட மாட்டார்கள். மேலும் எப்போதும் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய வீரர்கள் தங்களுடைய கால்களை பயன்படுத்தி சரியாக அடிப்பார்கள்”

“மேலும் 2008க்குப்பின் முதல் முறையாக நாக்பூரில் இந்த வாரம் ஆஸ்திரேலியா ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அங்கே கடந்த முறை ஜேசன் கிரேஜா 12 விக்கெட்களை எடுத்தார். அந்த வகையில் இம்முறையும் புற்கள் இல்லாமல் ஆரம்பத்திலே பிளாட்டான பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதனால் அங்கே ஸ்விங் இருக்காது என்பதால் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் கடினமான வேலைகளை செய்ய வேண்டும். ஆனால் அங்கே இருக்கும் எக்ஸ்ட்ரா பவுன்ஸை பயன்படுத்தி நேதன் லயன் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் நாக்பூரில் சிறப்பாக செயல்படுவார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: தந்தையை போலவே சதமடித்த ஜூனியர் சந்தர்பால் – டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய தனித்துவமான சாதனை

அதாவது வரலாற்றில் நிறைய தருணங்களில் இந்திய வீரர்களை தடுமாற வைத்துள்ள நேதன் லயன் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்தால் தனது அனுபவத்தால் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார் என மிட்சேல் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement