AUS vs ENG : ரூல்ஸ் எல்லாம் வாயில் மட்டுமே பேசுவோம், மீண்டும் நிரூபித்த ஜோஸ் பட்லர்

- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இத்தொடரில் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைப்பதற்காக வலுவான இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. அதில் முதலிரண்டு போட்டிகளில் தலா 8 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் போராடி தோற்ற ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தொடரை இழந்து தலை குனிந்தது. உலக கோப்பை துவங்க இன்னும் ஒருசில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் இப்படி கடைசி நேரத்தில் தங்களது அணி சொந்த மண்ணில் மண்ணை கவ்வியுள்ளது ஆஸ்திரேலிய ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

அந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி அக்டோபர் 14ஆம் தேதியன்று கான்பெரா நகரில் நடைபெற்றது. மழையின் குறுக்கீட்டால் தலா 12 ஓவர்களாக குறைக்கப்பட்டு தாமதமாக துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

இங்கிலாந்து வெற்றி:
இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லருடன் 2வது விக்கெட்டுக்கு கைகோர்த்து 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் மாலன் 4 பவுண்டரியுடன் 23 (19) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் பென் ஸ்டோக்ஸ் 17* (10) ரன்கள் எடுக்க மறுபுறம் அதிரடியாக விளையாடிய கேப்டன் பட்லர் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 65* (41) ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் பினிசிங் கொடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் இங்கிலாந்து 112/2 ரன்கள் சேர்த்தது.

அதை தொடர்ந்து 113 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு முதல் ஓவரை வீசிய கிறிஸ் வோக்ஸ் முதலிரண்டு பந்துகளில் கேப்டன் ஆரோன் பின்ச், மிட்சேல் மார்ஷல் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டினார். அதனால் 0/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அணிக்கு சுமாரான பார்மில் தவிக்கும் மேக்ஸ்வெலும் 8 (9) ரன்களில் அவுட்டாகி சென்றார். அதனால் மீண்டும் தோல்வியை சந்திக்க காத்திருந்த ஆஸ்திரேலியா 3.5 ஓவரில் 30/3 ரன்கள் எடுத்திருந்தபோது ஜோராக வந்த மழை போட்டியை மேற்கொண்டு நடத்த விடாமல் தடுத்து நிறுத்தியது.

- Advertisement -

அப்படி சொந்த மண்ணில் மழையின் உதவியால் வைட்வாஷ் தோல்வியிலிருந்து ஆஸ்திரேலியா தப்பினாலும் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட இங்கிலாந்து 2 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பை வென்று அசத்தியது. முன்னதாக இப்போட்டியில் 5வது ஓவரை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசினார். அப்போது அந்த ஓவரில் பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கிரீஸ் விட்டு அடிக்கடி வெளியே வருவதை கவனித்த அவர் ஒரு பந்தை வீசி விட்டு அடுத்த நொடியே ரன் அவுட் செய்து விடுவேன் என்று கடுமையாக எச்சரித்து நடுவரிடமும் புகார் செய்தார்.

வாயில் மட்டும்:
தற்சமயத்தில் உலக அளவில் மிகப் பெரிய சர்ச்சையாக நிலவி வரும் மன்கட் என்றழைக்கப்பட்ட இந்த வகையான அவுட்டை ஐபிஎல் 2019 தொடரில் தமிழகத்தின் அஷ்வின் இதே பட்லருக்கு எதிராக செய்து விதிமுறைப்படி நடந்து கொண்டதாக விடாப்பிடியாக நின்றார். அவரது குரலில் நியாயம் இருந்ததால் மன்கட் அவுட்டை நேர்மைக்குப் புறம்பான பிரிவிலிருந்து நீக்கிய எம்சிசி மற்றும் ஐசிசி அமைப்புகள் ரன் அவுட் பிரிவுக்கு அதிகாரப்பூர்வமாக மாற்றியது.

ஆனாலும் கடந்த மாதம் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை அவ்வாறு அவுட் செய்த போது விதிமுறைக்கு உட்பட்டதாக இருந்தாலும் நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டதாக ஒட்டுமொத்த இங்கிலாந்தும் விமர்சித்தது. மேலும் உலக கோப்பை பைனலில் தங்களது பவுலர் மன்கட் செய்தால் அந்த பேட்ஸ்மேனை மீண்டும் களத்திற்கு அழைப்பேன் என்று ஜோஸ் பட்லர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இப்போட்டியில் ஸ்டார்க் குற்றம் சாட்டிய போது நான் கோட்டை விட்டு வெளியேறவில்லை என்று ஜோஸ் பட்லர் மறுப்பு தெரிவித்தது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அப்படி நேர்மையை பற்றி வாயில் மட்டுமே பேசும் அவர் களத்தில் இப்படி பின்பற்றாமல் இருப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் அந்த தருணத்தில் மிட்செல் ஸ்டார்க் தைரியமாக அவுட் செய்திருக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.

Advertisement