இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. 2007ஆம் ஆண்டு அறிமுகமான அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அத்துடன் கேப்டனாக 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபிகளையும் ரோஹித் சர்மா கேப்டனாக வென்று சாதனை படைத்தார்.
இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் ரோகித் தலைமையில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அந்த தோல்விக்கு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ரோஹித் சர்மா சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. குறிப்பாக ஆஸ்திரேலிய தொடரில் பேட்டிங்கில் ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் கடைசி போட்டியில் தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக்கொண்டார்.
ஆச்சர்யம் இல்லை:
அந்த வகையில் மோசமான ஃபார்மில் இருக்கும் அவரை அடுத்து நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்தது. அதற்கு முன்பாகவே ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதில் தமக்கு ஆச்சரியம் இல்லை என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆதர்டன் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது அவருடைய சொந்த முடிவா அல்லது யாராவது அந்த முடிவை எடுக்கச் சொல்லித் தள்ளினார்களா என்பது கேள்வியாகும். ஏனெனில் ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கு முந்தைய நாளில் அவரை இந்திய தேர்வாளர்கள் தேர்வு செய்யப் போவதில்லை என்று முடிவெடுத்ததாக செய்திகள் வந்தன. அது யூகங்களாக இருந்தன”
விடை பெற்ற ரோஹித்:
“அதைப் பற்றி நமக்கும் தெரியாது. ஆனால் ரோஹித் சர்மா எடுத்துள்ள முடிவு ஆச்சரியமானது கிடையாது. ஏனெனில் பேட்டிங்கில் ரன்கள் குவிக்காத கேப்டன் தலைமையில் ஒரு அணி தோல்வியை சந்திப்பது மோசமான கலவையாகும். அதற்கு எடுத்துக்காட்டாக ரோகித் தலைமையில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 6 போட்டிகளில் இந்தியா 5 தோல்விகளை சந்தித்தது”
இதையும் படிங்க: 2025 ஐ.பி.எல் தொடரில் கண்டெடுக்கப்பட்ட மிகச்சிறந்த இளம்வீரர் இவர்தான் – ரிக்கி பாண்டிங் பாராட்டு
“அவருடைய பேட்டிங் ஃபார்ம் முற்றிலும் குறைந்து போய் விட்டது. அது எந்த ஒரு கேப்டனுக்கும் மோசமான காம்பினேஷனாக இருக்கும். தற்போது அவருக்கு 38 வயதாகி விட்டது. மறுபுறம் இந்திய கிரிக்கெட் நிறைய ஆழமான திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது. அது போன்ற சூழ்நிலையில் ஃபார்ம் மற்றும் வெற்றிகள் உங்கள் பக்கம் வரும் வரை உங்களால் காத்திருக்க முடியாது. அதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட இந்த ஓய்வு முடிவு ஆச்சரியமானது கிடையாது. ஆனால் உங்களுடைய டெஸ்ட் கேரியர் முடியும் போது சோகமாக இருக்கும். ரோகித் குறிப்பிடத்தக்க கிரிக்கெட்டர்” எனக் கூறினார்.