கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி எளிதாக மும்பை அணியை வீழ்த்தி இந்த இரண்டாவது பாதியில் இரண்டாவது வெற்றியை பெற்றது. அதுமட்டுமின்றி புள்ளி பட்டியலிலும் தற்போது முன்னேற்றத்தை கண்டுள்ளது. கொல்கத்தா அணி பெற்ற இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் துவக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் காரணமாக திகழ்ந்தார்.
ஏனெனில் இந்த தொடரின் இரண்டாவது பாதியில் பெங்களூர் அணிக்கு எதிராக அறிமுகமான அவர் அறிமுக போட்டியிலேயே 41 ரன்கள் அடித்து அசத்தினார். அதன்பின்னர் மும்பை அணி நிர்ணயித்த 157 ரன்கள் இலக்கை எதிர்த்து விளையாடும் போது துவக்க வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார்.
30 பந்துகளை சந்தித்த அவர் 53 ரன்கள் குவித்து தனது பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது இந்த வருகை காரணமாக தற்போது கொல்கத்தா அணி வேறுவிதமாக பலமாக மாறியுள்ளது. இந்நிலையில் அவரது பேட்டிங்கை பாராட்டிப் பேசியுள்ள கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் கூறுகையில் :
வெங்கடேஷ் ஐயரால் எல்லாவிதமான ஷாட்களும் விளையாட முடிகிறது. அவரது பேட்டிங் பார்ப்பதற்கு மிக அருமையாக இருக்கிறது. நிச்சயம் இது போன்ற வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபடும்போது அது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். அவரால் போட்டியை தனியாக நின்று வெற்றி பெற்று கொடுக்க முடியும். இது போன்ற வீரர்கள் ஒன்று சதம் அடிப்பார்கள் இல்லை என்றால் டக் அவுட் ஆகி செல்வார்கள்.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான கில்க்ரிஸ்ட் போன்று வெங்கடேஷ் ஐயரால் நிச்சயம் விளையாட முடியும் என்றும், நிச்சயம் இந்திய அணிக்கு இவர் ஒரு நல்ல பிளேயராக மாறுவார் என்றும் பிரண்டன் மெக்கல்லம் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.