இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இந்திய அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் எழுந்த விமர்சனங்களை சமாளிக்க ரோஹித் சர்மாவை முன்னே அனுப்பிய கௌதம் கம்பீர் பின்னே இருந்து கொண்டதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி சமீபத்தில் விமர்சித்திருந்தார்.
அத்துடன் கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் கோப்பைகளை தனியாளாக வென்று கொடுத்தது போல் கௌதம் கம்பீர் மக்கள் தொடர்பு வைத்து சித்தரித்ததாகவும் அவர் விமர்சித்தார். அந்த வகையில் கௌதம் கம்பீர் நயவஞ்சகர் என்றும் மனோஜ் திவாரி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நயவஞ்சகர் என்று கம்பீரை சொன்னது ஏன் என்று திவாரி விளக்கம் கொடுத்துள்ளார்.
நயவஞ்சக கம்பீர்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீரின் செயல்கள் அவருடைய வார்த்தைகளை பொருத்தவில்லை. அவரை நான் ஏன் நயவஞ்சகர் என்று சொன்னேன்? ஏனெனில் அவர் கொடுத்த பேட்டிகளை நினைவு கூர்ந்து பாருங்கள். அதில் ஒரு பேட்டியில் அனைத்து வெளிநாட்டு பயிற்சியாளர்களும் இந்தியாவுக்கு வந்து உணர்வுகள் இன்றி பணத்தை மட்டும் சம்பாதித்து போவதாக கம்பீர் கூறியிருந்தார்”
“எனவே இந்திய அணிக்கு இந்தியர்கள் மட்டுமே பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று கம்பீர் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அந்த வாய்ப்பு கிடைத்த போது அவர் ஏன் அனைத்து துணை பயிற்சியாளர்களையும் இந்தியர்களாக தேர்ந்தெடுக்கவில்லை? ஏன் அவர் ரியான் டஸ்சேட் அல்லது மோர்னே மோர்கெல் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளார்”
நியாயமான விமர்சனம்:
“இருப்பினும் தாம் விரும்பிய வெளிநாட்டு பயிற்சியாளர்களை தற்போது கம்பீர் பெற்றுள்ளார். ஆனாலும் அவரால் வெற்றி முடிவுகளை கொடுக்க முடியவில்லை. அந்த வகையில் அவருடைய செயல்கள் வார்த்தைகளுக்கு பொருத்தமாக இல்லை. அதனாலேயே நயவஞ்சகர் என்று சொன்னேன். தற்போது தோல்விகளில் இருந்து கம்பீர் பாடங்களை கற்றுக் கொள்வார்”
இதையும் படிங்க: ரிங்கு நொறுக்கிய கண்ணாடி.. ஒரு வருடமாகியும் மாற்றாத காரணத்தை பகிர்ந்த தெ.ஆ மைதான நிர்வாகி
“அதிலிருந்து அவர் முன்னேற வேண்டும். அப்போது தான் அடுத்த தொடரில் இருந்து வெற்றிகள் கிடைக்கும். முதலில் அவர் தலைமை பயிற்சியாளராக எவ்வளவு நாட்கள் தொடர்வார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல இந்திய அணிக்கு இந்தியர்கள் தான் பயிற்சியாளராக வேண்டும் என்று கம்பீர் தெரிவித்தது உண்மையே. ஆனால் தற்போது அபிஷேக் நாயர் தவிர்த்து 2 துணை பயிற்சியாளர்களை வெளிநாடுகளில் இருந்து கம்பீர் தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.