இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வேகப்பந்து வீச்சாளருமான மலிங்கா கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 101 விக்கெட்டுகளையும், 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 338 விக்கெட்டுகளையும், 84 20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 107 விக்கெட்டுகளையும் சர்வதேச அரங்கில் வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடர்களில் 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
எனினும் டி20 கிரிக்கெட்டில் தான் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் நிச்சயம் இலங்கை அணிக்காக இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அனைவரும் எதிர்பாராத விதமாக இன்று அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் விடை பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான அவர் 2014ஆம் ஆண்டு இலங்கை அணி டி20 உலகக் கோப்பையை வென்றபோது அணியின் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள இந்த ஓய்வு அறிவிப்பில் : டி20 கிரிக்கெட்டில் எனது ஷூவிற்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்னுடைய இந்த பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அவர்களுக்கு நன்றி. இனிவரும் காலத்தில் நான் என்னுடைய அனுபவத்தை இளம் வீரர்களுடன் பகிர விரும்புகிறேன் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இனிவரும் காலங்களில் எனது பணிக்கு ஓய்வு கொடுத்து இளம் வீரர்களை ஊக்குவிக்க போகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Hanging up my #T20 shoes and #retiring from all forms of cricket! Thankful to all those who supported me in my journey, and looking forward to sharing my experience with young cricketers in the years to come.https://t.co/JgGWhETRwm #LasithMalinga #Ninety9
— Lasith Malinga (@ninety9sl) September 14, 2021
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 546 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் உலகின் பல்வேறு நாடுகளிலும் டி20 போட்டிகளில் முன்னணி வீரராக செயல்பட்டு வந்தார். தற்போது வெளியான இந்த t20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் அவர் பெயர் இடம்பெறாத அந்த விரக்தியில் அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றிருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட அவர் கிரிக்கெட் நிர்வாகத்திடம் விருப்பம் தெரிவித்திருந்தும் அவரின் பெயர் இடம்பெறாததன் வருத்தம் காரணமாக தற்போது அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடிய அவர் மற்றபடி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அணிகளின் குறித்த விவரங்களையும் பகிர்ந்து அவர் அந்த அனைத்து அணிகளுக்குமே நன்றி என்று கூறி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களை சற்று சோகம் அடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.