41 முறை சாம்பியனான மும்பைக்கு ஷாக் கொடுத்த கத்துக்குட்டி, புதிய வரலாறு – குவியும் வாழ்த்துக்கள்

Ranji Trophy MP
- Advertisement -

இன்று உலக அரங்கில் இந்தியா கொடிகட்டிப் பறப்பதற்கு அடித்தளமாக அமையும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் 2 பாகங்களாக நடைபெற்றது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 38 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் ஐபிஎல் 2022 தொடருக்கு முன்பு நடைபெற்றது. அதில் தமிழகம் போன்ற அணிகள் சுமாராக செயல்பட்டு லீக் சுற்றுடன் நடையை கட்டிய நிலையில் பெங்கால், ஜார்கண்ட், மும்பை, உத்தரகாண்ட், கர்நாடகா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய 8 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

அந்த நிலைமையில் பெங்களூருவில் துவங்கிய இந்த தொடரின் நாக்-அவுட் சுற்றில் ஜூன் 6இல் முதலாவதாக நடைபெற்ற காலிறுதிப் போட்டிகளில் மத்தியபிரதேசம், பெங்கால், மும்பை மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 4 அணிகள் அபாரமாக செயல்பட்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதை தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி சுற்றில் மும்பை மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் சிறப்பாக செயல்பட்ட இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

- Advertisement -

41 முறை சாம்பியன்:
இறுதியில் ஜூன் 22-ஆம் தேதியன்று பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் துவங்கிய மாபெரும் இறுதிப்போட்டியில் 41 சாம்பியன் பட்டங்களை வென்று வெற்றிகரமான ரஞ்சி அணியாக சரித்திரம் படைத்துள்ள வலுவான மும்பையை ஒருமுறைகூட கோப்பையை வெல்லாத கத்துக்குட்டியான மத்திய பிரதேசம் எதிர்கொண்டது. அந்த முக்கிய போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் பிரிதிவி ஷா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்சில் 374 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பிரிதிவி ஷா 47, ஜெய்ஸ்வால் 78 என அந்த அணியின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில் அர்மன் ஜாபர் 26, சுவேட் பார்க்கர் 18, ஹர்டிக் டாமோர் 24, சாம்ஸ் முலானி 12 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்த அந்த அணிக்கு அதிக பட்சமாக நம்பிக்கை நட்சத்திர இளம் வீரர் சர்ப்ராஸ் கான் சதமடித்து 134 ரன்கள் விளாசினார். மத்திய பிரதேசம் சார்பில் அதிகபட்சமாக கவுரவ் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மத்திய பிரதேசத்துக்கு ஹிமான்சு மன்ட்ரி 31 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் யாஷ் துபே சதமடித்து 133 ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் சுபம் சர்மா சதமடித்து 116 ரன்களும் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக எலிமினேட்டரில் மிரட்டிய ரஜத் படிதான்ர் இங்கும் சதமடித்து 122 ரன்கள் எடுக்க இறுதியில் பார்த் ஜெயின் 57 ரன்கள் எடுத்ததால் அந்த அணி முதல் இன்னிங்சில் 536 ரன்கள் எடுத்தது. மும்பை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சாம்ஸ் முலானி 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

சுருண்ட மும்பை:
அதனால் 162 ரன்கள் பின்தங்கிய நிலையில் 42-வது கோப்பையை வெல்ல 2-வது இன்னிங்சில் பெரிய ரன்களை எடுக்க வேண்டிய மும்பை மத்திய பிரதேசத்தின் சிறப்பான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 269 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு பிரிதிவி ஷா 44, ஹர்டிக் டாமோர் 25, அர்மன் ஜாபர் 37, சுவேட் பார்க்கர் 51, சர்பராஸ் கான் 45 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல தொடக்கத்தை பெற்றாலும் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றினார்கள். மத்தியபிரதேசம் சார்பில் குமார் அதிகபட்சமாக குமார் கார்த்திகேயா 4 விக்கெட்களை எடுத்தார்.

- Advertisement -

அதனால் 108 என்ற சுலபமான இலக்கை இன்றைய கடைசி நாளில் துரத்திய மத்திய பிரதேசத்துக்கு யாஷ் துபே 1, பார்த் சஹாணி 5 என டாப் மாடல் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானாலும் தொடக்க வீரர் ஹிமான்சு மன்ட்ரி 37 ரன்களும் சுபம் சர்மா 30 ரன்களும் எடுக்க மிடில் ஆர்டரில் வந்த ரஜத் படிடார் 4 பவுண்டரி உட்பட 30* ரன்கள் எடுத்து சூப்பர் பினிசிங் கொடுத்ததால் 108/4 ரன்கள் எடுத்த மத்திய பிரதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறிய மும்பைக்கு சாம்ஸ் முலானி 3 விக்கெட்டுகள் எடுத்து போராடிய போதிலும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

முதல் சாம்பியன்:
இந்த அற்புதமான வெற்றியால் 41 முறை கோப்பையை வென்று வெற்றிகரமான ரஞ்சி அணியாக சாதனை படைத்துள்ள மும்பைக்கு பைனலில் அதிர்ச்சி கொடுத்த மத்திய பிரதேசம் ரஞ்சி கோப்பை வரலாற்றில் தங்களது முதல் கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது. இந்த வெற்றிக்கு மொத்தமாக 146 ரன்கள் எடுத்த சுபம் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மும்பை போன்ற வெற்றிகரமான அணி மற்றொரு கோப்பை வென்றிருந்தால் அது ஆச்சரியமில்லை.

இதையும் படிங்க : IND vs ENG : ரோஹித் சர்மாவை தொடர்ந்து மேலும் ஒரு வீரருக்கு கொரோனா உறுதி – அணியில் இருந்து விலகல்

ஆனால் மத்திய பிரதேசம் போன்ற கோப்பை வெல்லாத அணி முதல் கோப்பையை வென்றது அம்மாநில கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனையாகும். இந்த வெற்றியை பார்த்து அம்மாநிலத்தைச் சேர்ந்த இன்னும் நிறைய இளைஞர்கள் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வப்பட்டு நாட்டுக்காக விளையாடும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்பதால் அந்த அணியின் இந்த வெற்றிக்கு பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

Advertisement