இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 2022இல் கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் ஓரளவு அசத்திய இந்தியா கடந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடரில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அந்தத் தோல்விகளுக்கு கேப்டன் ரோஹித் சர்மா மோசமாக விளையாடியதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.
அதன் காரணமாக அடுத்து நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்ததாக தெரிகிறது. அதற்கு முன்பாக ரோஹித் சர்மா கேப்டனாகவே ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து ஜஸ்ப்ரித் பும்ரா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் அடிக்கடி காயத்தை சந்தித்து வருகிறார்.
பும்ரா தான் கேப்டன்:
எனவே வருங்காலத்தை கருத்தில் கொண்டு சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோரில் யாரையாவது ஒருவரை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கிரிக்கெட்டில் காயங்கள் ஏற்படுவது சகஜமான விஷயம் என்று 1983 உலகக் கோப்பை வென்ற முன்னாள் இந்திய வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். எனவே அதையெல்லாம் ஒரு காரணமாக வைத்து பும்ராவை கேப்டனாக நியமிக்காமல் தவறு செய்யக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி மதன் லால் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவை வழி நடத்துவதற்கு சரியானவர் என்று நான் நினைக்கிறேன். ஃபிட்னஸ் என்பது வேறுபட்ட விஷயம். ஃபிட்டாக இருந்தால் பும்ரா தான் கேப்டனாக செயல்பட முதல் தேர்வாக இருக்க வேண்டும். ரோஹித் போன்ற பெரிய வீரர்கள் அணிக்குள் வந்தால் மற்ற வீரர்களுக்கு இடம் இருக்காது”
மதன் லால் அட்வைஸ்:
“அது போன்ற வீரர்கள் தாமாகவே உங்களுடைய முதல் தேர்வாக இருப்பார்கள். ஃபார்ம் என்பது எந்த நேரத்திலும் மீண்டும் திரும்பி வரலாம். ஃபார்ம் பரவாயில்லை. ஆனால் பெரிய வீரராக இருந்தாலும் உங்களிடம் நல்ல செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. எனவே ஓய்வு பற்றி எடுக்கப்பட்ட எந்த முடிவாக இருந்தாலும் அது அவர்களுடைய சொந்த முடிவாக இருக்கும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: அந்த 2 சோதனைகளை ஈஸியா முடிச்ச பிசிசிஐ.. ஐபிஎல் 2025 தொடரை 7 நாளில் முடிச்சு காட்டும்.. கங்குலி பேட்டி
இதற்கிடையே விராட் கோலியும் ஓய்வு பெற உள்ளது பற்றி பிசிசிஐ’யிடம் சொன்னதாக செய்தி வெளியாகியுள்ளது. அதை பிசிசிஐ தள்ளிப் போடுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.