கொல்கத்தாவின் கனவையும் தூள் தூளாக உடைத்து எறிந்த லக்னோ அணி – டேபிள் டாப்புக்கு சென்று அசத்தல்

LSG vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 7-ஆம் தேதி நடைபெற்ற 2 போட்டிகளில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 53-வது லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பங்கேற்றன. அப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோவுக்கு முதல் ஓவரிலேயே அதன் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் 1 பந்து கூட சந்திக்காத வேளையில் ரன் அவுட்டாகி அதிர்ச்சியைக் கொடுத்தார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடாவுடன் கைகோர்த்த மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் அதிரடியாக ரன்களை குவித்தார்.

LSG vs KKR Quintan De Kock

2-வது விக்கெட்டுக்கு முக்கியமான 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை மீட்டெடுத்த இந்த ஜோடியில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 50 (29) ரன்கள் எடுத்த குயின்டன் டி காக் அவுட்டாக அவருடன் பொறுப்பாக பேட்டிங் செய்த தீபக் ஹூடாவும் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41 (27) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய க்ருனால் பாண்டியாவும் அடுத்த ஒருசில ஓவர்களில் 25 (27) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

178 ரன்கள் இலக்கு:
அதனால் 122/4 என பின்னடைவை சந்தித்த லக்னோவுக்கு அதிரடி காட்டிய மார்கஸ் ஸ்டோனிஸ் ஷிவம் மாவி வீசிய 19-வது ஓவரில் முதல் 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு 4-வது பந்தில் 28 (14) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் எஞ்சிய 2 பந்துகளில் அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹொல்டர் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 13 (4) ரன்களில் அவுட்டானர். அந்த ஒரே ஓவரில் 30 ரன்கள் வந்ததால் தப்பிய லக்னோ 20 ஓவர்களில் 176/7 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸ்ஸல் 2 விக்கெட்கள் எடுத்தார்.

அதன்பின் 178 என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தாவுக்கு முதல் ஓவரிலேயே தமிழக வீரர் பாபா இந்திரஜித் டக் அவுட்டாகி ஏமாற்ற அடுத்துவந்த ஷ்ரேயஸ் ஐயரும் 6 (9) நடையைக்கட்டினார். அப்போது மற்றொரு தொடக்க வீரர் 14 (14) நிதிஸ் ராணா ஆரோன் ஃபின்ச் 2 (11) என முக்கிய அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 7 ஓவர்களில் 25/4 என திண்டாடிய கொல்கத்தாவின் தோல்வி ஆரம்பத்திலேயே உறுதியானது.

- Advertisement -

கொல்கத்தா மோசம்:
அந்த மோசமான சூழ்நிலையிலும் 3 பவுண்டரி 5 சிக்சருடன் லக்னோவுக்கு பயத்தை கண்ணில் காட்டிய ஆண்ட்ரே ரசல் 45 ரன்களில் அவுட்டாக அவருக்குப்பின் சுனில் நரேன் மட்டும் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 22 (12) ரன்கள் எடுத்து போராடி ஆட்டமிழந்தார். ஆனால் இதர வீரர்கள் அனைவரும் லக்னோவின் அற்புதமான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை மளமளவென பரிசளித்ததால் 14.3 ஓவர்களிலேயே கொல்கத்தா வெறும் 101 ரன்களுக்கு சுருண்டது. அந்த அளவுக்கு லக்னோ சார்பில் பந்துவீச்சில் அசத்திய ஆவேஷ் கான் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

KKR Shreyas Iyer

இந்த தோல்வியால் பங்கேற்ற 11 போட்டிகளில் 7-வது தோல்வியை பதிவு செய்த கொல்கத்தாவின் பிளே ஆப் கனவு சுக்குநூறாக உடைந்து போனது. ஏனெனில் 75 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றதால் அந்த அணியின் ரன்ரேட் மோசமாக மாறியதுடன் எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாலும் கூட தற்போதுள்ள 8-வது இடத்திலிருந்து 5, 6 இடத்தைப் பிடிக்க முடியுமே தவிர டாப் 4 இடத்திற்குள் நுழைய முடியாது. காரணம் டெல்லி, ஹைதராபாத், பஞ்சாப் ஆகிய 3 அணிகள் தலா 10 புள்ளிகளுடன் அந்த இடத்திற்கு போட்டி போடுகின்றன.

- Advertisement -

சொதப்பிய கொல்கத்தா:
கடந்த வருடம் இறுதிப் போட்டி வரை சென்ற கொல்கத்தாவுக்கு இந்த வருடம் ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற கேப்டன்ஷிப் அனுபவம் கொண்ட புதிய கேப்டன் நியமிக்கப்பட்டதால் குறைந்தது பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என அனைவரும் நம்பினர். அதற்கேற்றார்போல் முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அந்த அணி முதல் வாரத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் அதன்பின் அணிக்குள் தேவையற்ற மாற்றங்களை செய்ததால் சொதப்ப தொடங்கிய அந்த அணி 5-வது வாரத்தின் முடிவில் பிளே ஆப் சுற்று வாய்ப்பை கோட்டை விட்டது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

சொல்லப்போனால் ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடங்களை பிடித்த சென்னையும் மும்பையும் கூட இப்படி சிறப்பான தொடக்கத்தை பெற்று இடையில் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை கோட்டை விடவில்லை. அந்த வகையில் மும்பை, சென்னை ஆகிய அணிகளை தொடர்ந்து 3-வது அணியாக லீக் சுற்றுடன் கொல்கத்தா வெளியேறுவது 99% உறுதியாகியுள்ளது.

மறுபுறம் பேட்டிங்கில் அசத்தி பந்துவீச்சில் மிரட்டிய லக்னோ பங்கேற்ற 11 போட்டிகளில் 8-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து ப்ளே ஆப் வாய்ப்பை தங்களின் முதல் சீசனிலையே 100% உறுதி செய்துவிட்டது. அதுவும் கொல்கத்தா போன்ற வலுவான அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது நாக் – அவுட் சுற்றுக்கு முன்பாக லக்னோவுக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement